காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஷ்மீரின் அவந்திப்போரா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதரகம் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. உயிர் இழந்தோரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதனை தோற்கடிக்கவும், இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே: காஷ்மீரில் நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். 1989க்கு பிறகு புல்வாமா மாவட்டத்தில் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் கேபி சர்மா, பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், உயிரிழந்தோர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், இந்தியாவுடன் துணை நிற்கும் எனக் கூறியுள்ளது.