பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் உள்ள படங்கள், பயங்கரவாதிகளின் படங்கள் ஆகியவற்றை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மற்றும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து படங்களை வெளியிட்டுள்ளது உளவுத்துறை. இன்று அதிகாலை இந்த முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 350க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தாக்குதல் நடந்த இடங்களின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம், ஆயுத கிடங்கு ஆகியவை குண்டுவீசித் தகர்க்கப் பட்டுள்ளது. அந்த ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகள் 200, கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் டெட்டனேட்டர்கள் ஆகியவை குண்டுவீச்சில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய பயிற்சி முகாமில், கட்டடத்தின் படிக்கட்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு தேசியக்கொடிகள் வரையப்பட்டுள்ளன. இவற்றின் மீது மிதித்து நடந்து செல்லும் வகையில் அந்த நாடுகளின் தேசியக் கொடிகளை தரை விரிப்புகளாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இன்று நடத்தப் பட்ட தாக்குதலில் ஆப்கன் மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய மௌலானா அம்மார், மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சயீப், மூத்த சகோதரன் இப்ராஹிம் அசார், முப்தி அசார் கான் உள்ளிட்டோர் கொல்லப் பட்டுள்ளன.
இந்தப் படங்களை உளவுத் துறை வெளியிட்டிருக்கிறது.