அரசு செலவில் தனக்குத்தானே சிலைகள் வைத்துக் கொண்ட விவகாரத்தில், பதில் அளித்துள்ள உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, மக்கள் விரும்பியதாலேயே அவ்வாறு சிலைகள் வைத்ததாகக் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் ஆட்சி நடைபெற்றபோது நினைவகங்கள் கட்டப்பட்டன. இதில் மாயாவதி, கட்சி சின்னமான யானை, கட்சித் தலைவர் கன்ஷிராம் உள்ளிட்ட சிலைகள் பெரிய அளவில் வைக்கப் பட்டன. இதில் ரூ.1400 கோடி வரையில் ஊழல் நடந்துள்ளதாக, விசாரணை தொடங்கி நடைபெற்றது.
மக்கள் பணத்தை ஒரு கட்சிக்கான சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்னோ, நொய்டாவில் யானை மற்றும் மாயாவதியின் சிலைகள் அமைக்கப் பட்டதற்கு ஆன செலவை மாயாவதி திரும்பச் செலுத்த வேண்டும் என்று யோசனை கூறியது.
“இந்த சிலைகளுக்காக செலவழித்த மக்கள் பணத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் தற்போதைக்கு கருதுகிறோம்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கூறியது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 22-ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மக்கள் விருப்பப்படியே எனது சிலைகள் அமைக்கப் பட்டது என்று கூறியுள்ளார்.