உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் மகேந்திரன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79.
‘முள்ளும் மலரும்’ ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் மகேந்திரன்!
1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர்! தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். ‘சபாஷ் தம்பி’, ‘நிறைகுடம்’, ‘கங்கா’, ‘திருடி’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். அவர் கதை எழுதிக் கிடைத்த புகழைவிட இயக்குநர் என அவர் அடைந்த புகழ் பெரிது.
கடந்த 2006-ஆம் ஆண்டு ‘சாசனம்’ என்ற படத்தை இயக்கினார். அதுதான் அவர் இயக்கிய கடைசிப் படம்.
‘தெறி’ படத்தில் நடிக்கவும் செய்தார். ‘நிமிர்’, ‘Mr. சந்திரமெளலி’, ‘சீதக்காதி’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தற்போது கரு.பழனியப்பன் இயக்கிவரும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதியுடன் நடிக்க கமிட் ஆகி நடித்து வந்தார்.
இந்நிலையில், இயக்குநர் மகேந்திரனுக்கு கடந்த ஒரு வாரமாகவே உடல்நிலை மிக மோசமடைந்தது. டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவ சிகிச்சையை அவர் உடல் ஏற்க இயலாத நிலையில், இன்று (ஏப்ரல் 2) அதிகாலை அவர் காலமானார்.
அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்குப் பின் நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.