தெலுங்கில்- பி.எஸ் சர்மா
தமிழில்- ராஜி ரகுநாதன்
‘டிட்டிப: நியாய:’ –
டிட்டிப –ஆள்காட்டிப் பறவை
ஒரு கடற்கரையில் கூடு கட்டிக் கொண்டு ஒரு ஆட்காட்டிப் பறவை ஜோடி வசித்து அந்தது. கடலில் எழும் அலைகளில் அதன் கூடும் அதில் இருந்த முட்டைகளும் அடித்துச் செல்லப்பட்டன. கடல் அவ்வாறு செய்வது அது முதல்தடவை அல்ல. பறவை ஜோடி மிகவும் வருந்தியது. “டிட்டி டாவ்” என்று சப்தமிட்டு அழுதன. இந்த முறை தாய்ப் பறவையால் துயரம் தாங்க முடியவில்லை. “அழுது என்ன பயன்? ஏதாவது செய்ய வேண்டும்” என்று அந்த ஜோடிப் பறவைகள் ஒரு முடிவுக்கு வந்தன.
கடல் மீது பகை கொண்டன. கடலை மணல் கொண்டு மூடத் தீர்மானித்தன. சிறிது சிறிதாக மணலை மூக்கால் முகர்ந்து வந்து கடலில் போட்டன. அவற்றைப் பார்த்த மேலும் சில பறவைகளும் உதவிக்கு வந்தன. அந்த காட்சியைப் பார்த்த மூவுலக சஞ்சாரி நாரத முனிவர் வியந்து போனார். பக்ஷி ராஜா கருடனிடம் அந்த செய்தியை தெரிவித்தார். அந்த பறவைகளின் தன்னம்பிக்கையை பாராட்டினார்.
திடமான நிச்சயத்தோடு பணி புரிந்த பறவைகளின் மேல் கருடனுக்கு அன்பு பிறந்தது. தானும் ‘டிட்டிப’ பறவைகளுக்கு உதவ முன்வந்தது. தன் முதலாளியான விஷ்ணு பகவானிடம் அனுபதி பெற்று ‘வைனதேயன்’ எனப்படும் கருடன் பூலோகத்திற்கு வந்தது. பறவை அரசன் கூட அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதைப் பார்த்த தேவர்கள் அந்த ‘டிட்டிப’ பறவைகளுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று வாழ்த்தினர்.
கருடன் தன் விசாலமான இறக்கைகளால் சமுத்திரத்தை வற்றச் செய்யத் தொடங்கியது. அப்போது என்ன நடந்தது?
சமுத்திர அரசன் கருடனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் கருடனிடம் பிரார்த்தனை செய்தான். தன் பறவை இனத்தைச் சேர்ந்த ‘டிட்டிப’ பறவைகளுக்கு நேர்ந்த நஷ்டத்தை கருடன் எடுத்துரைத்தது. கடல் அரசன் அந்த பறவைகளின் முட்டைகளைத் திரும்ப ஒப்படைத்தான்.
இந்த கதையினை ஆதாரமாகக் கொண்டே ‘டிட்டிப நியாயம்’ ஏற்பட்டது. தன்னம்பிக்கையும் திட சங்கல்பமும் உள்ளவர்களுக்கு இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கும் என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. முயற்சியால் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்று எடுத்துரைப்பதற்கு பஞ்ச தந்திரத்தில் வரும் இந்த கதையை உதாரணம் காட்டுவார்கள்.
இதே போன்ற தன்னம்பிக்கை, சுய கௌரவம், சாகசம் போன்றவற்றைக் காட்டி வலிமை வாய்ந்த எதிரிகளைக் கூட வென்ற உதாரணங்கள் வரலாற்றில் பல உள்ளன.
‘லாச்சித் போர்புகன்’ வரலாறு ‘டிட்டிப’ நியாயத்திற்கு உதாரணமாக நின்றுள்ளது. இவர் அஸ்ஸாம் இளைஞர்களிடம் ஊக்கத்தையும் சைதன்யத்தையும் நிரப்பிய ஹைந்தவ சிம்மம். காலையில் எழுந்தவுடன் நினைத்துப் போற்றத் தகுந்த ‘லாச்சித் போர்புகன்’ 17ம் நூற்றண்டைச் சேந்தவர் (1622-1672). தேயிலைத் தோட்டத்தில் கிடைத்த சிசு. அஸ்ஸாம் மொழியில் ல என்றால் ரத்தம். சித் என்றால் நனைந்த என்று பொருள். இவர் சிறந்த வீரனாக வளர்ந்தார். லாசித் சுய கௌரவத்தை உயிரை விட அதிகமாக நேசித்தார். அஸ்ஸாம் பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த (1671- சராயிகாட் போர்) முகலாய படைகளின் இதயங்களில் அச்சமூட்டிய தீரர் இவர்.
அறிவுக் கூர்மை, மனத்திடம், உடல் வலிமை உள்ளவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்பதைத் தெரிவிக்கும் டிட்டிப நியாயத்தை விளக்கும் இந்த சுலோகம் விக்ரமாதித்ய சரிதத்தில் உள்ளது.
உத்யம: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம: |
ஷடேதே யத்ர வர்தந்தே தத்ர தேவஸ்ஸஹாயக: ||
பொருள்: கடினமான முயற்சி, சாஹசம், மனோ தைரியம், அறிவுக் கூர்மை, உடல் வலிமை, பராக்கிரமம் என்ற ஆறு குணங்கள் உள்ளவரிடம் கடவுள் அருள் இருக்கும்.
சத்ரபதி சிவாஜி, மிகவும் வலிமை மிக்க ஔரங்கசீபை பந்தாடினான். வெறும் இருநூறு வீரர்கள் கொண்ட படையோடு ஷாயிஸ்தகான் படைத்தளத்திற்குள் நுழைந்து அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பி போராடிய பராக்கிரமசாலி வீரசிவாஜி. சண்டையிட இயலாத ஷாயிஸ்தகான் புறமுதுகிட்டு ஓடினான். சுலோகத்தில் கூறிய ஆறு குணங்களும் கொண்ட சிவாஜிக்கு பவானி தேவி வாளைப் பரிசளித்தாள். ஹைந்தவ சாம்ராஜ்யத்தை நிறுவியவனாக சிவாஜியின் புகழ் வரலாற்றில் நிலைபெறச் செய்தாள்.
சங்கல்ப பலத்தால் வெற்றி பெற்றவர்களை ‘டிட்டிப’ நியாயத்தோடு ஒப்பிடுவர். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதே இந்த டிட்டிப நியாயம்.
—0o0—