தமிழகத்தில் நேற்றைய பரபரப்பு அதிமுக., அறிவித்த கூட்டணிகள்தான்! பாமக., பாஜக., இரு கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து அறிவித்தது அதிமுக.,! இன்னமும் தொகுதிகள் உறுதி செய்யப் படாத நிலையிலும், போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையின் படி, பாமக.,வுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப் பட்டது.
ஆனால், பாஜக.,வுக்கு 5 தொகுதிகளே ஒதுக்கப் பட்டன. இது குறித்து பாஜக., அபிமானிகள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். தனித்தே போட்டியிட்டிருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்து வருகிறார்கள்.
இருப்பினும், இந்தக் கூட்டணிக்கான முதல் முயற்சிகளை மேற்கொண்டது பாஜக.,தான்! தமிழகத்தில் இந்த முறை மெகா கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து, கூட்டணியை அமைக்க முயற்சி செய்தது. பழைய கூட்டாளிகளுடன் கூட்டணி அமையும் என்று மோடியும் சொல்லிவிட்டுச் சென்றார். அதன்படி, அதிமுக., பாமக., தேமுதிக., என எதிர்பார்த்த வகையில் அதிமுக., பாமக.,வுடன் கூட்டணி அமைந்துள்ளது.
பாஜக., முயற்சி எடுத்தாலும், தமிழகத்தில் பெரிய கட்சியான அதிமுக.,வே இங்கு கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்று உறுதியாக சொல்லப் பட்டதால், அதை ஏற்று, பாஜக.,வின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலே அதிமுக., தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, சிவசேனையுடனான கூட்டணி முடிந்த கையுடன் தமிழகத்திலும் கூட்டணி குறித்து பேசி பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை நேற்று அவர் வரவில்லை. பதிலாக, முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய பியூஷ் கோயலே வந்தார்.
அமித் ஷா ஏன் வரவில்லை என்று பல்வேறு யூகங்கள் கிளம்பிக் கொண்டிருந்த நிலையில், கூட்டணி குறித்தும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் அறிவிப்பு வந்த போது கட்சியினருக்கு தெரியவந்தது.
ஆமாம்.. இந்த அஞ்சு தொகுதிகளை வாங்குவதற்கு அமித் ஷா வேற வரணுமா? என்றும், கூட்டணித் தலைமை என்பது அதிமுக எனும் போது, அதற்கு எதற்கு அமித் ஷா வரணும் என்றும் தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.
பாஜக., இதனை வழக்கம் போல் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அழைப்பதையே விரும்பியது. ஆயினும் ஒரு புதிய பெயரை சொல்லிவிட்டுச் சென்றார் பாமக., ராமதாஸ்.
அதிமுக., தலைமையில்தான் கூட்டணி என்றால், ஏன் தேமுதிக.,வுடன் அதிமுக., பேச்சுவார்த்தை நடத்தாமல், பியூஷ் கோயல் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார் என்ற கேள்வியை பாஜக.,வினர் எழுப்புகின்றனர்.