நீங்கள் இப்போது மாணவரில்லை. படித்து முடித்து, ஒரு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணியில் சேர்ந்திருக்கிறீர்கள். நிறுவனத்தின் சூழல் உங்களுக்குப் புதிது. என்னதான் ஏட்டளவில் படித்துவிட்டு வந்திருந்தாலும், இயல்பில் நடைமுறையில் சில சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள். பணிச்சூழலில் இணக்கமான நிலையை எதிர்பார்க்கிறீர்கள். மற்றவர்களிடம் எப்படிப் பழகுவது?
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் – பிரசாரத்தோடு, ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ பிரசாரமும் சேர்ந்துகொண்டதில், இன்று ஒற்றைக் குழந்தைக் குடும்பங்களே பெருகியுள்ளன. வீடுகளில் உடன் விளையாடி, நன்றாகப் புரிந்துகொண்டு பழகி மகிழ சகோதரனோ சகோதரியோ இல்லாத சூழலில் வளர்கிறார்கள் பெரும்பாலான இளைஞர்கள்! படித்து முடித்து பணியில் சேரும்போது, அவர்களுக்கு இயல்பிலேயே அடுத்தவர்களுடனான பழகும் சூழலில் தடுமாற்றம் ஏற்படுகிறது. விளைவு – மேலாண்மைக் கல்வியைத் தேடி ஓடவேண்டியிருக்கிறது.
நண்பர் ஒருவர். சென்னையில் அரசின் கணக்குத் தணிக்கைப் பிரிவில் உயர்பதவியில் உள்ளார். ஒருநாள், அவருக்கு நேர்ந்த அலுவலகச் சிக்கல் ஒன்றை விவரித்தார். பதவியின் கௌரவம் சார்ந்த பிரச்னையாக இருந்தது அது. தனக்கு மேலும் கீழும் உள்ளவர்களின் பழகும் தன்மையைச் சொல்லி, ‘‘எவ்வளவோ செய்துவிட்டேன். இனியும் எப்படித்தான் நடந்து கொள்வதோ தெரியவில்லை’’ என்று பெருமூச்சு விட்டார். அலுவலகத்தில் அவர் எப்படி நடந்து கொள்ளலாம் என்பதற்கான தீர்வுகளை நம் முன்னோர் எப்படித் தந்துள்ளனர்..?
நம்மில் பலர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தைப் படித்திருப்போம். சிலர் பாராயணம் செய்வார்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர், சர்வ வ்யாபி என்று பொருள். இந்த ஒரு பெயருக்கு இப்படி ஒரு பொருள் வருகிறதல்லவா… அதுபோல், சஹஸ்ரநாமம் என்ற ஆயிரம் பெயர்களுக்கும் ஆயிரம் பொருள்கள் உண்டு. அவற்றில், பகவான் விஷ்ணுவின் குணநலன்கள் பெரிதாகப் போற்றப்பட்டிருக்கும்.
அப்படி வருவதுதான், ‘அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்’ என்பது. இது ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைத் தரும். மானீ&மானம் பார்ப்பவன். அமானீ – மானத்தை விலக்கியவன். மானதோ மான்யோ & மானம் பார்ப்பவரின் (பக்தரின் / அடியவரின்) மானத்தைக் காப்பவன். பகவானின் இந்தப் பண்புநலன்களுக்கு ஓரிரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.
கிருஷ்ணனைப் பற்றி நூறு அவதூறு வார்த்தைகளை அள்ளி வீசினான் சிசுபாலன். தன்னை அவமானமாகப் பேசிய சிசுபாலனை பலமுறை மன்னித்த கிருஷ்ணன், அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. மற்றொரு முறை பாண்டவர் சார்பில் கௌரவர்களிடம் கிருஷ்ணன் தூது சென்றான். அப்போது துரியோதனன் கிருஷ்ணனை தூதுவன் என்றும் பார்க்காமல் அவமானப் படுத்தினான். ஆயினும், தன்னைச் சரணடைந்த பாண்டவர்களுக்காக கண்ணன் அந்த அவமானங்களைத் தாங்கிக் கொண்டான்.
ஆனால், பாண்டவர்கள் பட்ட அவமானத்தைக் களைய ஓடோடி வந்தான். திரௌபதி மானம் காக்க உதவினான். இன்னொரு நேரம், சிறந்த கிருஷ்ண பக்தரான பீஷ்ம பிதாமகரை துரியோதனன் ‘என் வீட்டு உப்பைத் தின்று, நீங்கள் பாண்டவர் நலனையே நாடி யுத்தம் செய்கிறீர்கள்’’ என்று கோபமாகத் திட்டி அவமானப்படுத்தினான்.
அந்த அவமானம் தாங்காமல் கண்ணீர் மல்க ‘‘போர்க்களத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சபதம் செய்த கண்ணனையே ஆயுதம் எடுக்க வைத்து யுத்தம் செய்து காட்டுகிறேன்’’ என்று பீஷ்மர் சபதம் செய்தார்.
பக்தன் பீஷ்மரின் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, கண்ணன் போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தினான். தன் பக்தனின் சொல்லைக் காக்க தன் சபதத்தையே மீறினான் கண்ணன். இதனால்தான், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தர்மருக்கு பீஷ்மர் சொன்னபோது, ‘அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்’ என்பதை அழுத்திச் சொன்னாராம்.
இப்படி, தன் மீதான அவமானங்களைத் தூர விலக்கி, தன் அடியவர் மீது விழும் கறைகளைக் களைய ஓடோடிச் செல்வதால்தான் ‘லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்’ என்று, மூவுலகங்களுக்கும் ஸ்வாமியாக, தலைவனாக விஷ்ணு மதிக்கப்படுகிறான் என்று பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்தார்.
இதுவே ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்பு நலனும்கூட! தன் மீதான குற்றத்தைத் தாங்கிக்கொண்டேனும், தன் கீழ் பணிபுரியும் சக ஊழியரின் பிரச்னைகளையும் அவர்கள் மீதான களங்கங்களையும் துடைக்க உடனே முயல வேண்டும் என்று மேலாளருக்குத் தேவையான பண்புநலன்களாக நவீன மேலாண்மைக் கல்வி சுட்டிக்காட்டுகிறது.
ஆனால், இங்கும் ஒரு சிக்கல் எழுகிறது. ‘தன் நிலையிலிருந்து கீழிறங்கி, தன் கீழே பணியாற்றுபவருக்கு சலுகை செய்யவும் உதவவும் ஓடோடிச் சென்றால், தனக்கான உரிய மரியாதையும் கௌரவமும் போய்விடுமே’ என்று, ஒருவர் நினைக்கக்கூடும். மேலாண்மைக் கல்வி அதற்கும் ஒரு வழியைக் காட்டுகிறது.