கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட உலக நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது, லட்சக் கணக்கான உயிர்களைக் காக்க இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி!
உலக நாடுகள் தங்களுக்குத் தேவை என கேட்டுக் கொண்ட ஹைட்ராக்ஸிக்ளோரோக்யுன் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பதற்குக் கிடைத்த வாய்ப்பு என்றும், அதை விட்டுவிட முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, பிரேசில் அதிபர்கள் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஹைட்ராக்சிகுளோரோக்யுன் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியது.
கடந்த வாரம் சனிக்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப், பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலில் அமெரிக்காவின் பாதிப்புகளைச் சொல்லி, ஹைசிக்யு மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கி, உடனே மருந்தினை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவருக்கு பதிலளித்த மோடி, இந்தியா தங்களால் ஆன அனைத்து விதங்களிலும் இந்த விவகாரத்தில் உதவும் என்றார்.
இந்நிலையில், இந்த மருந்து ஏற்றுமதிக்கான தடையை நீக்குவது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் கலந்து ஆலோசித்த மோடி, பின்னர் இந்த மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடை, மனிதாபிமான அடிப்படையில் நீக்குவதாகக் கூறியது. தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில், காலத்தின் அவசரம் கருதி, முதற் கட்டமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மருந்து அங்குச் சென்றடைந்துள்ளது.
உற்பத்தி, இருப்பு, எதிர்காலத் தேவை ஆகியவை குறித்து மருந்து நிறுவனத் தலைவர்களுடன் பேசி அறிந்த பின்னரே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது லட்சக்கணக்கான உயிர்களைக் காக்க இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு எனவும், அதை விட்டுவிட முடியாது எனவும் மோடி தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய அரசு கூறிய போது, உயிர்களையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதே தாரக மந்திரம் என்றது.
இந்நிலையில், வாகன வசதி பெற்ற அரசு அதிகாரிகள், பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய அளவில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிய நிலையில், பொருளாதாரத்தை வலுப்படுத்த சில நிபந்தனைகளுடன் வா்த்தக, வேளாண் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அறுவடைக் காலம் நெருங்கி வருவதால் நிபந்தனைகளுடன் வேளாண் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்றும், கொரோனா பாதிக்காத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.