திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சோதனை அடிப்படையில் இன்று முதல் தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆந்திர மாநில அரசு வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, முதல் 3 நாட்களுக்கு சோதனை முறையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 79 நாட்களாக அர்ச்சகர்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று தேவஸ்தான ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் கோயில் திறக்கப்பட்டதால் இரண்டரை டன் மலர்களைக் கொண்டு, கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசன வரிசைகள் மற்றும் லட்டு வழங்கும் கவுண்டர்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏழுமலையானை தரிசம் செய்ய நாளை மறுநாள் உள்ளூர் பக்தர்களுக்கும், வரும் 11 ஆம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், தரிசன முன்பதிவுக்கான 300 ரூபாய் டிக்கெட் விற்பனை இன்று முதல் ஆன்லைனில் தொடங்கும் எனவும், நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க 6 அடி தூரத்தில் தரையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மேலும் குடிநீர் குழாய்கள் கால் விரலில் அழுத்தினால் இயங்குமாறு அமைக்கபட்டுள்ளது.