பாலிவுட்டின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. அவரது மரணம் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
சுஷாந்தின் இழப்பை தாங்க முடியாத ரசிகர்கள் இன்னும் சமூக வலைதளங்களில், அவரின் பிரிவை நினைத்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரசிகை ஒருவர் சுஷாந்தின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்துடனும் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் எனும் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படித்து வரும் 13 வயதுச் சிறுமி, சுஷாந்த் சிங்கின் மிகப்பெரிய ரசிகராக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் மரணம் அடைந்த செய்தியைக் கேள்விபட்டதில் இருந்து மிகவும் கவலையுடனும் மன அழுத்தத்துடனும் இருந்துள்ளார். சுஷாந்தின் மரணத்துக்குப் பிறகு, அவரது வீடியோக்களையும் அவர் நடித்த திரைப்படங்களில் வரும் பாடல்களையும் தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
இந்தநிலையில், வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தால் அவரது உறவினர்கள் அதிக கவலையுடன் இருந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதியின் காவல்துறை அதிகாரி பேசும்போது, “பெற்றோர்கள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்துள்ளனர்.
பின்னர், சிறுமியின் தந்தை வீட்டின் பின்பகுதி வழியாக வீட்டுக்குள் நுழைந்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமி எழுதிய தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக் குறிப்பில் சிறுமி எழுதியிருந்தது பற்றி அதிகாரிகள், “நடிகர் சுஷாந்த் இந்த உலகத்தில் இருந்து சென்றுவிட்டார். எனவே, தானும் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். அந்தக் கையெழுத்து பொருந்துவது தொடர்பாகவும் விசாரிக்கிறோம். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
இதே போல் இதற்கு முன்பும் ஒரு ரசிகரும் ரசிகையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தால் சுஷாந்த் சிங்கின் பிற ரசிகர்கள் உட்பட பலரும் தற்போது கவலையில் மூழ்கியுள்ளனர்.