மைசூரு, மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா ஒம்பாலே கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (39). சிவில் என்ஜினீயராக இருந்த லோகேஷுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கும் அஞ்சட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்த அமுல்யா (22) என்ற கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது.
இதனால் இருவரும் ஊர் சுற்றுவது நெருக்கமாக இருப்பது என இருந்துள்ளனர். லோகேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என தெரிந்தும் பல நேரங்களில் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தனிமையில் இருந்துள்ளார் அமுல்யா.
தன்னை இரண்டாவதாக திருமணம் செய்யகோரி அமுல்யா பலமுறை கேட்டும் லோகேஷ் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம் போல் தனியார் விடுதியில் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது அமுல்யா லோகேஷிடம் மனைவியை கைவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் லோகேஷ் ஆத்திரத்தில் அமுல்யாவை அடித்து, உதைத்து தாக்கி உள்ளார். பின்னர், அங்கிருந்த கயிற்றால் அமுல்யாவின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில், அமுல்யா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தன் நண்பரான நித்தின் என்பவரை தொடர்புகொண்டு, நடந்ததை கூறி தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் போலீசார் உதவியுடன் லோகேஷ் இருந்த ஹோட்டலை அடைந்த போது லோகேஷ் அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அமுல்யா படுக்கையில் பிணமாகவும் கிடந்துள்ளார். இருவரது உடலையும் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி விட்டு போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.