மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் அவசர காலங்களில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதாவது, தனியார் மருத்துவமனைகளில் அவசரத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், அதற்கான மெடிகிளெய்மை பண்ணிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பொதுவாக, Central Government Health Scheme (CGHS) எனப்படும் மத்திய அரசு சுகாதாரத் திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவோரும் மெடிகிளெய்ம் செய்து கொள்ள முடியும்.
இது தொடர்பான ஒரு வழக்கில்தான், அவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான மருத்துவச் செலவுத் தொகையை (Reimbursement) விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்
CGHS பட்டியலில் மருத்துவமனை இல்லை என்பதை சுட்டிக்காட்டி Reimbursement தர முடியாது என மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
“Reimbursement கேட்பவர் உண்மையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாரா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மருத்துவமனையோ டாக்டரோ அந்த சிகிச்சையை அளித்ததற்கான சான்றுகள் இருந்தாலே போதும்” என்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே. அகர்வால் குறிப்பிட்டார்.
நீதிபதி அகர்வாலுடன் நீதிபதி அசோக் பூஷனும் இணைந்த உச்ச நீதிமன்ற அமர்வுதான் இவ்வழக்கை விசாரித்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் மிகவும் பயனளிக்கும் இந்த அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது.
மருத்துவ வசதிகளின் அனைத்து பயன்களையும் பெற அவர்களுக்கு முழு உரிமை உள்ளதாகவும், அந்த உரிமையை அவர்கள் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சிகிச்சை பெறும் வயதான ஓய்வூதியதாரர்கள் Reimbursement தொடர்பான பிரச்சனைகளால் உடலளவிலும் மனதளவிலும் பொருளாதார ரீதியிலும் துன்பப்படக் கூடாது என்ற விஷயத்தையும் உச்ச நீதிமன்றம் குறித்து வைத்துக் கொண்டது.
மேலும், ஓய்வூதியம் பெறுவோரின் Reimbursement தொகையை ஒரு மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்ட அமைச்சகத்தின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுக்குப் பிறகும் தங்கு தடையற்ற மருத்துவ வசதிகளை அரசு ஊழியர்கள் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே CGHS திட்டம் முன்னெடுக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.
CGHS திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.