சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கெடுபிடிகளுக்கு பேர் போனவர் கிரண் பேடி. காவல் அதிகாரி தோரணையில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். அதில் இருந்து நிர்வாகப் பணியில் இருக்கும் தற்போதும் அதே கெடுபிடிகளைக் காட்டி வருகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு புதுச்சேரியில் கலக்கி வருகிறார். புதுச்சேரி கடற்கரையில் திடீரென வாகனத்தில் வந்தார், சோதனை மேற்கொண்டார். இப்போது கிராமங்களில் தூய்மைப்பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் புதிய கெடுபிடியைக் கொண்டு வந்துள்ளார்.
புதுச்சேரி மண்ணடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
இலவச அரிசி பெற வேண்டும் என்றால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் எனும் வகையில் சான்றிதழ் உள்ளிட்ட சில வேண்டும். இப்போது கூடுதலாக ஒரு சான்றிதழை ஒட்டுமொத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிறார் கிரண்பேடி. அது, சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று அவர் போட்டுள்ள உத்தரவு இப்போது வழக்கம் போல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையான கிராமம் என்று சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்று கறாராகக் கூறியுள்ளார் கிரண்பேடி.
சான்றிதழ் பெறும்வரை அரிசி சேர்த்து வைக்கப்பட்டு பின்னர் மொத்தமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார் கிரண்பேடி.