புது தில்லி : நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியே தாக்கல் செய்வார் என நிதி அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது உடல்நலம் மோசமான காரணத்தால், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என கூறப் பட்டு வந்தது. ஆனால், இந்தத் தகவல்களை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சகம், பட்ஜெட் கூட்டத்தொடரில் அருண் ஜேட்லி நிச்சயம் பங்கேற்பார் என்று கூறியுள்ளது.
மேலும், அருண் ஜேட்லிக்கு பதிலாக, இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சக பொறுப்பை தற்காலிகமாக கவனித்து வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் உரையை தயார் செய்து வருகிறார் என்றும் அவரே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறப் பட்டது.
ஆனால், இந்தத் தகவலையும் மறுத்துள்ள மத்திய நிதி அமைச்சகம், அருண் ஜேட்லியே பட்ஜெட் உரையைத் தயாரித்து, பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் எனக் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது! எனவே, தற்போது தாக்கல் செய்யப் படுவது இடைக்கால பட்ஜெட் என்பதால், புதிய திட்டங்களுக்கான நிதித் தேவை குறித்து எதுவும் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து துறைகளுக்கும் ஜன.3ம் தேதியைத் தொடர்ந்து, மறுபடியும் ஜன.9ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டதாம்.