பீகார் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணம், காங்கிரஸ் கட்சியை மக்கள் இப்போது பாகிஸ்தானி எஜெண்ட் என்று சொல்கிறார்கள் என்பதுதான்!
பீகார் மாநில காங்கிரஸ் கமிட்டியில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக, அக்கட்சியின் பொதுச் செயலரும் செய்தித் தொடர்பாளருமான பினோத் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில்…
இந்திய விமானப் படை விமானங்கள், பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இது தொண்டர்களிடையே பெரிதும் எதிரொலித்துள்ளது. கட்சித் தலைவர்களின் பிரசாரத்தால், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏன் தேசப் பற்றோ மதிப்போ இல்லாமல் இப்படி பிரசாரம் செய்கிறது என்று கேள்வி கேட்கும் பொதுமக்கள், காங்கிரஸ் ஒரு பாகிஸ்தானி ஏஜெண்ட் என்று அடித்துக் கூறுகின்றனர். இதைக் கேட்கும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சர்மா எழுதியுள்ள கடிதத்தில், நான் நமது கட்சித் தொண்டர்களின் இத்தகைய மனக்குமுறலை கட்சி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அது குறித்து எதையும் காதுகொடுத்துக் கூட காங்கிரஸ் தலைமை கேட்கவில்லை. இந்த நாடே புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பெரும் கொந்தளிப்பிலும் வேகத்திலும் இருந்த போது, காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்வது வெட்க கரமானது. அதுவும் நம் விமானப் படை வீரர்களின் செயல்திறனை கேள்வி கேட்கும் விதமாக, எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கே, ஆதாரம் என்ன என்றெல்லாம் கேள்வி கேட்டு அரசியல் செய்வதை பீகார் மாநில காங்கிரஸ் தொண்டர்களே விரும்பவில்லை!
காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வரும் அறிக்கைகளும் மேடைப் பேச்சுகளும், நம் ராணுவத்தினரைக் குறை சொல்வது போலவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பது போலவும் அமைந்திருப்பது வெட்கக் கேடு. நம் காங்கிரஸ் கட்சி இப்போது தேசியவாதத்தையும், தேசப் பற்றையும் இழந்துவிட்டது என்ற கருத்தோட்டம் நம் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் மக்கள், காங்கிரஸ் கட்சி ஒரு பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த நாட்டின் மீதுள்ள அக்கறையில் இருக்கும் ஒரு நல்ல குடிமகன் என்ற அளவில், நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்… – என்று குறிப்பிட்டு ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளார் பினோத் சர்மா.
அவரது இந்தக் கடிதம் இப்போது பீகார் மாநில அரசியலில் மட்டுமின்றி, வட மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bihar Congress spokesperson Binod Sharma has tendered his resignation from the party citing the reason that he feels “ashamed” to be called a Congressi after his party asked for the proof of air strikes at Balakot, Pakistan by the Indian Air Force (IAF). He wrote that due to the lack of patriotism and nonchalant attitude of the party workers, people have started viewing Congress party as a Pakistani agent.