மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் விடவும் இந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது படுவேகமாகப் பேசினார்.
ஆனால் பிரதமர் மோடியோ, அந்த சூட்டைத் தணித்து, குளிர்வித்தார். மம்தா பானர்ஜி எனக்கு வருடம் தோறும் குர்தா, ரசகுல்லா அனுப்பி வைப்பார் என்று! அதுவே மீண்டும் புகைச்சலையும் சூட்டையும் கிளபியது மம்தாவுக்கு!
மோடியின் பற்கள் உடையும் படி கூழாங்கற்களையும் சேறு சகதியையும் ரசகுல்லாவில் போட்டு அனுப்புவேன் என்றார் மம்தா. இது மேலும் சூட்டைக் கிளப்பியது. ஆனால் மோடியோ, மேற்கு வங்க மண் பக்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திர நாத் டாக்குர், ராம்கிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் என புண்ணியர்கள் வாழ்ந்த புனித மண். அது எனக்கு இவர்களின் பிரசாதம் என்று திசை திருப்பி விட்டார்.
இப்போது வாக்குகளும் திசை மாறி, பாஜக.,வுக்கு சாதகமாகப் போனது. காரணம், தேசப் பற்றும் மண்ணின் மீதும் பற்று கொண்டோர் மேற்கு வங்கத்தில் அதிகமாக இருந்துள்ளனர்.
அதே காலகட்டத்தில், இந்தப் பிரச்னைகளின் பின்னே, தாம் ஒரு நாள் மோடியை அறைந்துவிடுவேன் என்று கூறினார். ஆனால் அது ஊடகங்களில் ஏதோ அடிப்பார், அறைவார் என்றெல்லாம் பேசப் பட, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் மம்தா.
பிரதமர் மோடியை நான் அறைவேன் என்று கூறவில்லை. ஜனநாயகத்தால் அறைவேன் என்றுதான் கூறினேன். நான் ஏன் பிரதமரை அறையப்போகிறேன். அவரை அறைந்தால் எனது கை உடைந்துவிடும். 56 அங்குலம் மார்பளவு கொண்ட பிரதமர் மோடியை நான் எவ்வாறு அறைய முடியும்? என்று கூறினார்.
இப்போது வாக்குகளால் மம்தாவை மக்கள் அறைந்துவிட்டனர்! தனது கர்வத்துக்கும் பேச்சுக்கும் வங்கத்து மக்கள் கொடுத்த அடி என்பதை இப்போது மம்தா உணரத் தலைப் பட்டிருக்கிறார்!