நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கடைசிக் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல், 6 கட்டங்களை முடித்து, இன்று 7ம் கட்டமான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 8 மாநிலங்களின் 59 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது.
பீகார்(8), ஜார்க்கண்ட்(3), மத்தியப் பிரதேசம்(8), பஞ்சாப்(13), மேற்கு வங்கம்(9), சண்டிகர்(1), உத்தரப் பிரதேசம்(13), ஹிமாச்சல்(4) ஆகிய தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. முக்கியமாக பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியும் இதில் அடங்கும்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இன்று காலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.
Bihar Chief Minister Nitish Kumar casts his vote at polling booth number 326 at a school in Raj Bhawan, Patna. #LokSabhaElections2019 pic.twitter.com/5OIMZptQnw
— ANI (@ANI) May 19, 2019
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாடு மிகவும் பெரியது. இதற்கு தேர்தலை நடத்துவது மிகப்பெரிய விஷயம். இருப்பினும் விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் இவ்வளவு இடைவெளி தேவையில்லை
மேலும் பல கட்டங்களாக தேர்தலை நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் ஓட்டுப்பதிவில் அதிக இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும்.
ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை சரியில்லை. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேசவுள்ளேன். மேலும் அனைவருக்கும் இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன்… என்றார் நிதிஷ் குமார்.இன்று காலை லக்னோவில் உ.பி முதல்வர் யோகி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்.