விசாகப்பட்டினம் எஸ்ஐ செய்த சாகசம். இன்னொரு உயிரை காத்த வீரம்.!
நீரில் மூழ்கிக் கொண்டிருந்த நீச்சல்காரரின் உயிரைக் காக்க துணிந்து நீரில் குதித்த போலீஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நீரில் மிதந்து வந்த உடலை வெளியே எடுப்பதற்காக ஏரியில் இறங்கினார் நீச்சல்காரர் ஒருவர். ஆனால் சிறிது நேரத்துக்கெல்லாம், அவருக்கும் மூச்சுமுட்டி அபாயத்தில் சிக்கி, கையை தூக்கி ஆட்ட ஆரம்பித்தார்.
தன் கண் முன்பே இன்னொரு உயிர் போராடுவதைக் காண சகிக்காத உதவி ஆய்வாளர் ஒருவர், உயிருக்குத் துணிந்து நீரில் குதித்து நீச்சல்காரரைக் காப்பாற்றினார். எப்படிப்பட்ட ஆபத்தான தருணத்திலும் ஓர் உயிரைக் காப்பதற்கு நாம் பின்வாங்கக் கூடாது என்று நிரூபித்தார். அவரைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
நடந்த சம்பவம் இதுதான்.. விசாகப்பட்டினம் மாவட்டம் ‘மாடுகல’ மண்டலம் ‘பெத்தேரு’ நீர்நிலையில் ஓர் உடல் மிதப்பதைக் கண்டு உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் உடலை வெளியே எடுப்பதற்கு உள்ளூரில் இருந்த நீச்சல்காரர் ஒருவரின் உதவியை நாடினர்.
அவர் நீரில் குதித்து உடலைக் கரைக்கு எடுத்து வரும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரும் நீரில் மூழ்கி மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு கையைத் தூக்கி விட்டார். சிறிது சிறிதாக அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் செய்வதறியாது திகைத்தனர். யாரும் நீரில் குதிக்கும் சாகசத்தை செய்யத் துணியவில்லை.
ஆனால் அங்கே இருந்த எஸ்.ஐ., ராமாராவு, உடனடியாக செயலில் இறங்கினார். தன் காவலர் சீருடையைக் களைந்துவிட்டு, உயிருக்குத் துணிந்து நீரில் தடாலெனக் குதித்தார். மூழ்கிக் கொண்டிருந்த நீச்சல்காரரைப் பிடித்து இழுத்து வந்து பாதுகாப்பாக கரை சேர்த்தார்.
இது தற்போது வைரலாகி வருகிறது. எஸ்ஐ.,க்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்!