‘துக்ளக்’ இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ஈ.வே.ரா குறித்து தாம் கேள்விப் பட்டதை, பத்திரிகைகளில் வெளியானதை தான் பேசினேன். அதனால், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என இன்று உறுதியாகக் கூறினார். அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தமிழகத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக., மூத்த தலைவர் சுப்ரமணியன்சுவாமி வெளியிட்ட பதிவில், ஒரு மாற்றத்திற்காக இம்முறை நான் ரஜினிக்கு ஆதரவளிக்கிறேன். 1971 ல் நடந்த ஈ.வெ.ராமசாமி பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்திரித்து அணிவகுத்து சென்றது உண்மை. இதனை, சோ ‘துக்ளக்கில்’ பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த், தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால், அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன்- என்று கூறியுள்ளார்.
பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில்,
திரு. ரஜினிகாந்த் அவர்கள் பத்திரிகை செய்தியின் நகலைக் காட்டியதற்கு திக வினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தை காட்டுங்கள்.
சேலத்தில் ஹிந்து கடவுளை ஈவெரா அவமதித்ததை கண்டித்து ஆத்திக சங்கத்தை சேர்ந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் ஒரு சுவரொட்டி அச்சிட்டார் அதை தமிழக அரசு தடை செய்து அந்த போஸ்டர்களை கைப்பற்றியது. ஆனால் திரு.சின்ன அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில் அந்த சுவரொட்டியில் ராமனையும் முருகனையும் ஈவெரா வலது கையில் செருப்பை வைத்துக்கொண்டு அடிப்பதுபோலும் இடது கையில் மாற்றான் மனைவியை பெண்டாட சட்டத்தில் அனுமதி வேண்டும் என்று எழுதிய நோட்டீசும் போட்டு அச்சடிக்கப்பட்டது. 24-02-1971 ஆணையின் படி சென்னை உயர்நீதிமன்றம் அரசு கைப்பற்றிய போஸ்டர்களை அவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் இதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்று உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்பு கீழே தரப்பட்டுள்ளது… என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம், திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நடிகர் ரஜினி, ஈ.வெ.ராமசாமி குறித்து யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
திமுக., முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் இரண்டாம் தலைமுறை வாரிசும், தற்போதைய திமுக., தலைவரின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ஈ.வெ.ராமசாமி விவகாரத்தில், நடிகர் ரஜினி உண்மை தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார். ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும் கர்நாடகாவில் ரஜினி மன்னிப்பு கோரினார் என்று கூறியுள்ளார்!
ரஜினியின் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்ற உறுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர்.
1971இல் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்று வர்ணித்த கன்னடர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் செய்த செயலை, 2020ல் சுமார் 50 ஆண்டுகள் கழித்து ஒரு மராட்டியரான ரஜினி வெளிப்படுத்திச் சொல்ல, வழக்கம் போல் தமிழர் பெயரில் இயங்கும் திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் காட்டுமிராண்டித்தன பேச்சுத் தலைவர்களுக்கே ஆதரவாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கண்டு உண்மைத் தமிழர்கள் வாய்மூடிச் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்.