முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிலும், அவரது சகோதரர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டு வருவதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளர் & அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி வீட்டிலும் அவரது அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தப் பட்டு வருகிறது. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் பெற்று மோசடி செய்ததாக புகார் அவர் மேல் இருந்தது.
அதிமுகவில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. மோசடி குறித்து அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரூர் மட்டுமல்லாது திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று சென்னை போலீசார் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான சென்னையில் உள்ள அவரது வீடு கரூரில் உள்ள வீடு அவரது சொந்த ஊரான ராமேஸ்வரபட்டி அவரது இல்லம் மற்றும் ராமகிருஷ்ண புரம் உள்ள அவரது தம்பி அசோக் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சென்னை போலீசார் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் ராமகிருஷ்ண புரம் அலுவலகத்தில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் – அப்போது திருநங்கை பாவனா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். திமுக தொண்டர்கள் அவரின் உடலில் தண்ணீரை ஊற்றி அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.