திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக இன்று நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்ட செயலர் ஆறுமுக கனி தலைமையில் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில்…
நான் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களாக ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய பகுதிகளில் மக்களை குழப்பி மதமாற்றம் செய்யும் வண்ணம் அதிக அளவில் கிறிஸ்துவ சர்ச் மற்றும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டு வருகின்றன. அரசு அனுமதி இல்லாமல் இவை கட்டப்படுகின்றன.
இந்தக் கட்டடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் தடையின்மை சான்று அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை மீறும் வண்ணம் மிக அதிக அளவில் அரசு அனுமதி இல்லாமல் கட்டடங்களைக் கட்டி, பெரும்பான்மை இந்துக்களை மதமாற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர்.
இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து அரசு அனுமதி இல்லாமல் இயங்கக் கூடிய கட்டடங்கள் ஜெபக் கூடங்கள் மற்றும் பள்ளிவாசல்களை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
அரசு அனுமதி இல்லாமல் செயல்படக் கூடிய கட்டடங்கள்
1) கிருஷ்ணாபுரம் ஊரில் திருச்செந்தூர் டு நெல்லை சாலையில் ரமணி பல்க் அடுத்ததாக உள்ள சர்ச் கட்டடம் பல வருடங்களாக அனுமதி இல்லாமல் செயல்படுகிறது.
2) மானூர் தாலுகா செட்டிகுறிச்சி கிராமத்தில் சங்கரன்கோவில் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் செயல்படக்கூடிய கட்டடம்
3) மானூர் தாலுகாவில் சங்கரன்கோவில் டு திருநெல்வேலி ரோட்டில் செயல்படக்கூடிய ஜெபம் ஏஜி சபை
4) மானூர் தாலுகா குத்தாலபேரி விலக்கு சங்கரன்கோவில் டு நெல்லை ரோட்டில் செயல்படக்கூடிய சர்ச்
5) மானூர் தாலுகா குப்பனாபுரம் விலக்கு அரசுப் பள்ளி அருகில் செயல்படக்கூடிய சர்ச் கட்டடம்
6) மானூர் தாலுகா மாவடி விலக்கு பகுதியில் சங்கரன்கோவில் நெல்லை சாலையில் செயல்படக்கூடிய சர்ச் கட்டடம்
7) மானூர் தாலுகா லெட்சுமிபுரம் முழுவதும் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படக்கூடிய சர்ச் கட்டடம்
8) மானூர் தாலுகா நடியூத்து பகுதியில் முழுவதும் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் செயல்பட்டு, பின்பு தடை செய்யப்பட்டு, பின் மீண்டும் செயல்பட்டு வரக்கூடிய சர்ச் கட்டடம்
9) வானூர் தாலுகா நடுபிள்ளையார்குளம் சுடலைமுத்து என்ற ஞானராஜ் என்ற தனிநபர் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக்கொண்டு சர்ச் நடத்தி வருகிறார்
10) மானூர் தாலுகா நடுபிள்ளையார்குளம் சாஸ்தா கோவில் அருகில் செயல்படக்கூடிய சர்ச் கட்டிடம்
11) தச்சநல்லூர் பகுதியில் மதுரை சாலை உச்சினிமாகாளி அம்மன் கோவில் எதிரே மாடியில் செயல்படக்கூடிய ஜெபவீடு என்று சொல்லி அரசு அனுமதி இல்லாமல் இயங்குகிறது
மேற்கண்ட அரசு அனுமதி இல்லாமல் செயல்படக்கூடிய சர்ச் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படக்கூடிய பள்ளிவாசல்களை உடனடியாக தடை செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
மேலும் ஜெப வீடு என்று செயல்படக்கூடிய கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு வைத்தியநாதன் அவர்கள் 2017 அக்டோபர் 20 அன்று ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாதபட்சத்தில் மிகப்பெரிய போராட்டங்களை விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்…
– என்று அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.