- அரசு மருத்துவமனையில் வைரஸ் தொற்று சிகிச்சை சரியில்லை…..
- ஆடியோவில் தகவல் கூறிய டாக்டர், பரிதாப மரணம்….
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை சரியாக இல்லை, நான் இன்னும் இரு நாளில் இறந்து விடுவேன் நான் போகப் போகிறேன் எல்லோருக்கும் நன்றி என்று வாட்ஸ் ஆப்பில், குரல் பதிவு மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதியம்மன் அம்மன் கோவில் அருகே, மருத்துவமனை நடத்தி வந்தவர் டாக்டர் சாந்திலால். இவர் கடந்த 10ஆம் தேதி தனக்கு, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, தனியார் பரிசோதனை நிலையத்தில் சீன வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்தார்.
அந்தப் பரிசோதனை முடிவில் சாந்திலாலுக்கு சீன வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து ராஜபாளையத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் குரலைப் பதிவு செய்து அனுப்பினார். அதில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியாக இல்லை, ஆக்ஸிஜன் கொடுப்பதில் குறைபாடு உள்ளது, தனக்கு மூச்சிறைப்பு அதிகமாக உள்ளது… எனவே இன்னும் இரண்டு நாட்களில் இறந்து விடுவேன் அனைவருக்கும் நன்றி, விடைபெறுகிறேன், வணக்கம் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் டாக்டர் சாந்திலால் பேசியிருந்தார்.
இந்தக் குரல் பதிவு கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
டாக்டர் சாந்திலாலின் கடைசிக் குரல் பதிவு…
இந்த நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் சாந்திலால், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கெனவே திமுக., உள்ளிட்ட எதிர்க் கட்சியினரும் வேறு சிலரும், சமூக ஆர்வலர்களும் அரசு மருத்துவமனையில் கொரோனா மருத்துவ சிகிச்சையில் மேற்கொள்ளப்படும் அஜாக்கிரதையான செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்! இந்த நிலையில், கடைசிக் குரல் எழுப்பி அதை உலகுக்குப் பரப்பி விட்டு, கொரோனாவுக்கு மரணித்த ஒரு டாக்டரின் மரணம் பொதுமக்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரவிச்சந்திரன், மதுரை