ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலக ஆர் ஐ கையும் களவுமாக பிடிபட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் இறந்து போன சோமு என்பவர் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருந்தார். அவருடைய இறப்பிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபாயை பெற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பெறவேண்டும்.
இதற்காக சோமுவின் மனைவி சேது மற்றும் சோமுவின் தம்பி மகன் தனசேகரன் ஆகியோர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் அட்டையின் நகலையும் இணைத்து சோமுவின் இறப்பிற்கு அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாய் உதவியை பெற விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தை பெற்ற அலுவலக ஆர் ஐ ஈஸ்வரன் என்பவர் அந்த மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பி 20,000 ரூபாய் அரசு வழங்கும் நிதியை பெற தனக்கு 2000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டு பல நாட்களாக அவர்களை அலைய வைத்துள்ளார்.
இதுபற்றி தகவல் கிடைக்கப் பெற்றவுடன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் போலீசார், ஆர் ஐ ஈஸ்வரன் இறந்து போன சோமுவின் உறவினர் தனசேகர் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி கூறும்போது… ஏழை விவசாயி சோமுவின் இழப்பிற்கு அவர் விவசாயி என்ற அடிப்படையில் அரசு வழங்கும் 20000 ரூபாய் உதவி தொகையை பெற மனு செய்த சோமுவின் உறவினர்களிடம் லஞ்சம் தந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைப்பதாகவும், இல்லையெனில் உதவித் தொகை பெற இயலாது என்றும் கூறி அலைக்கழித்து உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து லஞ்சம் பெறும் போது ஈஸ்வரனை கையும் களவுமாக கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இவர், அண்மையில்தான் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நியமனம் பெற்றவர் என்று தெரிகிறது. மிகவும் இளம் வயது உடைய ஒருவர், ரூ.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை