சென்னையில் உள்ள வளசரவாக்கம் ராமாபுரம் பகுதியைச் சார்ந்தவர் சின்னையா. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுவர்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் கோபி என்ற மகனும், யாமினி என்ற மகளும் இருக்கின்றனர். கோபி வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். யாமினி அங்குள்ள அரசு பள்ளியில் தற்போது 12 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக கல்வி கற்று வந்துள்ளார்.
மேலும், ஆன்லைன் மூலமாக கல்வி கற்க தனக்கு அலைபேசி வாங்கி தரும்படி பெற்றோரிடம், அண்ணனிடமும் கேட்ட நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் அலைபேசியை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
அதுவரை தனது சித்தியின் அலைபேசியை பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்ட நிலையில், அவரது செல்போனுக்கு அடிக்கடி அழைப்புகள் வந்ததால், வகுப்புகளில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை.
இதனால் தனக்கு பெற்றோர்கள் அலைபேசியை வாங்கித் தரவில்லை என்ற விரக்தியில், நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மகளின் உடலை கட்டியணைத்து கதறியழுத நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், யாமினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த யாமினியின் சக தோழிகள், நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.