
மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வேல் பூஜை, கந்தசஷ்டி கவச பாராயண நிகழ்சியில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாஜக., மாநில நிர்வாகி சீனிவாசன் தற்போது கொரானா தொற்றிலிருந்து விடுபட்டு இதில் கலந்து கொண்டார்.
தமிழ்க் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு பாஜக சார்பில் வேல் பூஜை நடத்தி, பெண்கள் கந்த சஷ்டி கவசம் பாடி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
திராவிடர் கழகத்தின் பின்னணியில் இயங்கிய கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசத்தினை இழிவு படுத்தி பேசியது கடந்த மாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து, போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தைக் கண்டித்து பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீடுதோறும் வேல் பூஜை நடத்தி வீட்டு வாசலில் திருவிளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாட ஏற்பாடு செய்யப் பட்டது. ஆதீனங்கள் சமூகப் பெரியோர்களின் இந்த அழைப்பை செயல்படுத்த இந்து இயக்கங்கள் வேலை செய்தன.
அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பாக பலர் திரண்டனர். கந்த சஷ்டி கவசம், வேல் பூஜை செய்து , பெண்கள் திருப்பரங்குன்றம் கோயில் முன்னுள்ள சன்னதி தெரு மற்றும் ரத வீதிகளில் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதில் இரு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அவர்களுடைய வீடுகள் முன்பு கடவுள் முருகன் திருவுருவப் படத்திற்கு பூஜை செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்தனர். இதில் மாநில தலைவர் சீனிவாசன் , மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உள்பட 500 பேர் திரண்டனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, திருப்பரங்குன்றம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை