
இந்து பட்டியல் சமூக மக்களின் உரிமையை பாதிக்கும் வகையில் தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர்கள் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 46 தனித் தொகுதிகள் உள்ளன.
இந்து பட்டியல் சமூக மக்கள் மட்டுமே போட்டியிடக்கூடிய இந்த தொகுதிகளில் கிறிஸ்தவ மற்றும் வேற்று மதத்திற்கு மாறியவர்கள், அதன் வழிபாட்டு முறையை தொடர்பவர்கள், தங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கிறிஸ்தவ பெயர்களை வைத்துள்ளவர்கள், கிறிஸ்தவ விழாக்களை கொண்டாடுபவர்கள் சிலர் இந்து பட்டியல் சமூகத்தவர் என போலியாக சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் தனித்தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரிகிறது.
தனித்தொகுதி என்பது இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் மதம் மாறியவர்கள் பட்டியல் சமூக சலுகைகளைப் பெற முடியாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சட்டத்தையும் அரசையும் தேர்தல் ஆணையத்தையும் ஏமாற்றும் வகையில் வேற்று மதத்திற்கு மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறைத்து போலியாக சான்றிதழ் பெற்று இந்து மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் இந்து பட்டியல் இனத்தவர் மட்டுமே போட்டியிடக்கூடிய தனித்தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
சிறுவயதில் இந்துவாக இருந்தபோது இந்து பட்டியல் சமூகத்தவர் என சான்றிதழ் பெற்றவர்கள் இடைக்காலத்தில் மதம் மாறியதை மறைத்து பழைய சான்றிதழ் அடிப்படையில் இன்று பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் தனி தொகுதிகளில் போட்டியிட முயன்று வருகின்றனர்.
எனவே தனி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தும் அவர்களது சாதி சான்றிதழ் குறித்தும் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து வேற்று மதத்தவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ்களை ரத்து செய்து அவர்கள் வேட்புமனுவையும் தள்ளுபடி செய்யுமாறு இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனித் தொகுதிகளில் போட்டியிடும் பல்வேறு கட்சியினரின் சாதிச் சான்றிதழ் குறித்து எழும் ஆட்சேபனைகளையும் தேர்தல் ஆணையம் நேரடியாக விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.
தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் வழங்கும் வருவாய் வட்டாட்சியர்கள், தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த தொகுதிகளில் கண்காணித்து, வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வைத்துள்ள போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!



