
— தவ்லீன் சிங் —
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
இந்திய இடதுசாரிகளும் போரும்!
என்னைப் போலவே நீங்களும் துயர் மிகுந்த, நம்பிக்கை அற்ற, ஏழை இந்தியாவில் – அப்போது ராகுல் காந்தியின் பாட்டி பிரதமராக இருந்தார் – வளர்ந்து இருந்தால் நீங்களும் இடதுசாரிகள், போலி தாராளவாதிகள் மீது சந்தேகப்படக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். அவர்களது மனித உரிமைகள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை என்ற உணர்வெழுச்சிகளுக்கு பின் உள்ள அப்பட்டமான பிற்போக்குத்தனத்தை பிரித்தறிய கற்றுக் கொண்டிருப்பீர்கள்.
ஸ்டேட்ஸ்மேன் நாளேட்டில் நிருபராக நான் பணிக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். பத்திரிக்கை தணிக்கை கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அது உண்மையிலேயே நம் வரலாற்றில் மிகவும் இருண்ட, பயங்கரமான அத்தியாயமாகும். ஆனால் அவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு ஆதரவு இருந்தது. சோவியத் யூனியனின் ஆதரவும் இருந்தது.
இந்திய இடதுசாரிகளின் கருத்தியலை அமெரிக்க எதிர்ப்புதான் வரையறை செய்தது. இது ஏன் என்று அப்போதே நான் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தேன். சீனாவிலும் சோவியத் ரஷ்யாவிலும் அவர்களது வழிபாட்டு நாயகர்களாக இருந்தவர்கள் செய்த கொடூரமான குற்றங்களை இவர்கள் எப்போதுமே கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். மாவோவும் ஸ்டாலினும் இந்திய இடதுசாரிகளின் நாயகர்களாகவே இருக்கிறார்கள், இன்றும் கூட.
தங்கள் பிள்ளைகளை கல்லூரி படிப்புக்கு அனுப்பும் போது இந்திய இடதுசாரிகள் பொதுவாகவே மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களையே தேர்ந்தெடுத்து அனுப்புவதை பார்த்தேன். மேற்கத்திய நாடுகளை வெறுப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். அதேபோல் தாங்கள் நோயுறும் போது சிகிச்சைக்காக மேற்கத்திய நாட்டில் உள்ள மருத்துவமனைகளையே தேர்வு செய்கிறார்கள். ஆண்டுகள் உருண்டோட, எல்லா வகையான இடதுசாரிகள் மீதும் எனக்கு வெறுப்பு வளர்ந்தது. அவர்கள் தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிய போது அது ஆழ்ந்த வெறுப்பாக மாறியது. இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எதுவோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுதான் என்னுடையது என்றானது.
கடந்த வாரங்களில் தில்லி, மும்பாயின் பொதுவெளியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ‘ஆக்கிரமிப்பு’ செய்து வருவதாக இடதுசாரிகளின் குரல் மிக உரக்க எழுந்தது. போர் தொடங்கியவுடன் அப்துல்லா அலி கமேனியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதாக கூறி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது அவர்களது குரல் ‘மதசார்பற்ற’ இடதுசாரிகளின் ஆதரவு குரலுடன் மேலும் வலுப்பெற்றுள்ளது. நமக்கு பக்கத்தில் தாலிபான்களின் இழிவான செயல்களையோ அல்லது அயதுல்லாக்களின் தீய செயல்களையோ கண்டனம் செய்யாதவர்கள் காசாவில் நடந்ததற்காக இஸ்ரேலை வீறிட்டு கண்டனம் செய்கிறார்கள். எல்லாவிதமான கொடூரங்களும் அரசியல் ஒடுக்குமுறையும் ஒரே மாதிரியாக கண்டனம் செய்யப்படாதது ஏன் ? என்ற குழப்பம் எனக்குள்ளது.
இந்திய இடதுசாரிகள், ஜிகாத்திகளின் குரலோடு குடும்ப ஆட்சியில் பல தசாப்தங்களாக அரசு பணியில் இருந்த ‘மதசார்பற்ற’ அதிகாரிகளின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது. அந்த அதிகாரிகள் பலரும் என்னைப் போன்றே உயர்குடியில் உரிமைகளோடு பிறந்து ஒட்டுமொத்தமாக ஆளும் வெளியை ஆக்கிரமித்து இருந்தவர்கள். இந்த அதிகாரிகள் போர் குறித்து மோடி அரசின் ‘மௌனத்தை’ வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்கள். மோடி தனது மௌனத்தின் மூலம் உலக நாடுகள் இந்தியாவை ‘அலட்சியப்படுத்தும்’ இடத்தில் நிறுத்தி உள்ளதாக அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்களால் தாக்கி வருகிறார்கள். ஈரான் மீது நடந்துள்ள தாக்குதலை பிரதமர் வெளிப்படையாக கண்டனம் செய்ய வேண்டுமென அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.
தனிப்பட்ட முறையில், இந்திய அரசு மிகவும் ஆபத்து மிகுந்த சூழ்ச்சிகரமான சாலையில் ஆச்சரியப் படத்தக்க வேகத்தில் பயணிப்பதாகவே, நான் கருதுகிறேன். நாம் எந்த பக்கத்திலும் சேரக்கூடாது. நாம் சேர வேண்டிய ஒரே பக்கம் இந்திய நலன் தான். அமெரிக்கா, இஸ்ரேலை நாம் பகைத்துக் கொள்வது நம்முடைய நலனுக்கு உகந்ததல்ல. அவ்வாறு செய்தால் அது நம்முடைய பழைய பகையாளியான சீனாவின் பக்கத்தில் நம்மை சேர்த்துவிடும். நிச்சயமாக அது இந்திய நலனுக்கு எதிரானது. ரஷ்யா, வடகொரியா போன்றவர்கள் நம் அணிக்கு தேவையில்லாதவர்கள்.
நடுநிலை என்ற நம்முடைய கொள்கையில் நாம் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். இரு தரப்பினரும் நம்முடன் பேசக்கூடிய நிலை வேண்டும். ஈரான் நம்மை நம்புகிறது. அதனால் தான் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளிக்கிறது.
என்னுடைய குழந்தைப் பருவம் ஒரு ராணுவ நகரத்திலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக்கொண்டே இருப்பதாக இருந்தது. நான் சந்தித்த வீரர்கள் பலரும் போர் என்பதை மோசமான தேர்வாகவே கருதியதை தெரிந்து கொண்டேன். எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்த்து விட முடியும் என்று நான் நம்பவில்லை. இந்தப் போர் எந்தத் தரப்புக்கும் தெளிவான வெற்றியைத் தருவதாகத் தெரியவில்லை.
இந்தப் போரின் முக்கியமான சாதனை எண்ணெய் விலையை உயர்த்தியதுதான். உலகில் நாம் இருக்கும் பகுதியில் உள்ள பொருளாதாரங்களை அது பாதித்துள்ளது. கடந்த வாரம் சமையல் எரிவாயு உருளைக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்று இருந்தது பீதி எங்கும் பரவுவதையே காட்டியது.
ஜனாதிபதி ட்ரம்ப் போரில் ‘வெற்றி’ பெற்று விட்டதாக அறிவித்துள்ளார். எனவே மிக விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவார் என்று நாம் நம்பலாம். சில விமர்சகர்கள் மோடி அமைதி ஏற்பட சமரச முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம், மோடியின் ‘மௌனம்’ இந்திய நலன்களை பாதிக்கவில்லை. மாறாக உதவியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
போரின் வெற்றி , தோல்விக்கு அப்பால் ஒரு பிரச்னை தீர்க்கப்படாமலேயே இருக்கப் போகிறது. ஈரானை சர்வதேச பயங்கரவாத முன்னெடுப்பாளராக மாற்றிய ஜிகாத் கருத்தியல். அதுதான் ஈரானிய பெண்கள் மீதான வன்முறையை, அவர்களின் உரிமைகளை நசுக்குவதில் மிகப்பெரிய – உலகில் இரண்டாவது பெரிய நாடாக – மாற்றியது. முதலிடம் தாலிபான்களுக்கு. கடந்த வாரத்துடன் ஆப்கானிய பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, பணிக்கு செல்லும், தங்கள் சொந்த வாழ்வை தாங்களே நிர்மாணிக்கும் உரிமை மறுக்கப்பட்டு, சுருக்கமாக சொன்னால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு 1636 நாட்கள் ஆகிறது. கணவன்மார்கள் மனைவிகளின் எலும்பு உடையாமல் அவர்களை அடிக்க சட்டப்படி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது நமக்கு மிக அருகில் உள்ள அண்டை நாட்டில் நடக்கிறது.
இடதுசாரி எழுத்தாளர்களும் அரசியல்வாதிகள் மனித உரிமை போராளிகளும் பெண்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற பழங்குடித்தனத்திற்கு எதிராக எப்போது பேசப் போகிறார்கள் ?
என் கேள்விக்கு நானே பதில் சொல்லி விடுகிறேன். அவர்கள் ஒரு போதும் பேசப் போவதில்லை. அவர்களது கோபமும் கண்ணீரும், உலகில் எது நடந்தாலும், அமெரிக்காவை பழி சுமத்த வழி கிடைத்தால் மட்டுமே வெளிப்படும். இது போன்ற அர்த்தமற்ற அமெரிக்க எதிர்ப்பு சூழ்நிலையில்தான் நான் வளர்ந்தேன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்




