
கடன் வாங்கிய அடையாளம்!
— பல்பீர் பூஞ்ச் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
அண்மைய வரலாற்றில் இந்திய துணை கண்டத்தில் வாழும் முஸ்லிம்கள் முதல்முறையாக தங்கள் உண்மையான எதிரி யார் என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் மத்திய கிழக்கில் நடக்கும் மோதல். பலரும் வெள்ளை மாளிகையால் – காபீர்களான அமெரிக்கா, இஸ்ரேலால் – இஸ்லாமிய ஈரான் தாக்கப்பட்டுள்ளதாக கருதுகிறார்கள்.
ஆனால் சூழ்நிலை மிகவும் சிக்கலாகி விட்டது. ஈரான் இஸ்ரேலை மட்டும் தாக்கவில்லை அமெரிக்காவின் கூட்டாளிகளான வளைகுடா நாடுகளையும் தாக்குகிறது. வளைகுடா நாடுகளில் பலவும் இஸ்லாமிய நாடுகள் என்பது மட்டுமல்ல அங்கு இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 15 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.
இந்த குழப்பத்திற்கு மூல காரணமாக அமெரிக்கா வெகு தூரத்தில் பாதுகாப்பாக இருக்கிறது. சண்டை இப்போது ஷியா, சன்னி என்ற இரண்டு முஸ்லிம் பிரிவினர் இடையே நடப்பதாக மாறிவிட்டது. அந்த இரண்டு பிரிவினரும் பாரம்பரியமாகவே வன்முறையில் நாட்டம் கொண்டவர்கள். இரண்டு பக்கத்திலும், பாதிக்கப்பட்டவர்களும் செத்துப்போனவர்களும் முஸ்லிம்கள்தான். உலகில் உள்ள மற்ற நாடுகளும் இந்த மோதலினால் வெவ்வேறு அளவுகளின் பாதிக்கப்பட்டுள்ளன.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு குழப்பமும் ஊசலாட்டமும் ஏற்பட்டுள்ளது. யாருக்கு எதிராக தங்களுடைய கோபத்தையும் வெறுப்பையும் எப்படி வெளிப்படுத்துவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்படும்போது எல்லாம் அவர்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் ஹிந்துக்கள் மீது அதை காட்டுவார்கள். (துருக்கியில்) ஓட்டமான் கலீபா முறை (கிலாபத்) சரிந்த போது இந்திய முஸ்லிம்கள் நாதியற்ற ஹிந்துக்களை தாக்கினார்கள். ஹிந்துக்களை படுகொலை செய்தனர். ஹிந்து பெண்களை கற்பழித்தனர். வீடுகளையும் உடைமைகளையும் கொளுத்தினர். அந்த வெறியாட்டத்தை மாப்ளா கலவரம் என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
அந்த (கிலாபத்) இயக்கத்தின் போது மௌலானா அபுல் கலாம் ஆசாத், 1920ல் , ‘ஹிஜ்ரத் கா பத்வா’ கொடுத்தார். அதாவது இஸ்லாமிய நாடாக இல்லாத இந்தியாவிலிருந்து வெளியேறி இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு குடியேறுவது என்பது அந்த பத்வா. ஆனால் அது நடக்கவில்லை. காரணம் ஆப்கானிஸ்தான் இவர்களை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தியது. துணை கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்களில் உண்மையான விசுவாசம் தேச எல்லையை கடந்து இருப்பதை அது வெளிக் கொணர்ந்தது. தேச எல்லைகளைக் கடந்து இஸ்லாமிய அகிலம் என்ற உம்மாவை பின்பற்ற முனைவது பொருளற்றது என்பதும் தெரிய வந்தது.
காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் இளைஞர்கள் வீடு வீடாக சென்று ஈரானில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பொன்னும் பொருளும் சேகரித்தார்கள். இது அன்பின் வெளிப்பாடு என்று போற்றப்படுகிறது. உணர்ச்சிகளை ஓரம் வைத்து விட்டு பார்க்கும் போது நம்மை சங்கடமான கேள்வி முறைத்துப் பார்க்கிறது. இந்த பரிவுணர்ச்சி ஏன் எப்பொழுதும் குறிப்பிட்ட புவியியல் , கருத்தியல் சார்ந்ததாக இருக்கிறது ?
நம் வீட்டிற்கு அருகில் இதுபோன்ற கொடூரங்கள் நிகழும் போது இந்த உத்வேகம் எப்படி காணாமல் போகிறது ? பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது இதுபோன்ற திரள் நிதி திரட்டப்படவில்லையே ? வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பாதிக்கப்பட்ட போது இப்படி வீடுதோறும் இவர்கள் யாரும் சென்று நிதி திரட்டி அனுப்பவில்லையே, ஏன்?
அண்மையில், தருண் என்ற ஹிந்து தலித் இளைஞன் டில்லி உத்தம் நகரில் ஹோலி பண்டிகையின் போது வண்ணப் பொடியை தூவியதற்காக முஸ்லிம்கள் கும்பலாக கூடி அவனை அடித்தே கொன்றார்கள். இதற்கு எந்த எதிர்ப்பு குரலும் இவர்கள் எழுப்பவில்லையே? இவர்களது வசதியான விவரிப்புக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே அது வலியாக, வேதனையாக தெரியும் இல்லையென்றால் கிடையாதா ?
துணைக் கண்டத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மேற்கு ஆசிய இஸ்லாமிய நாடுகளை குறிப்பாக சவுதி அரேபியாவை வழிகாட்டுதலுக்காக, குறிப்பாக மதம் சார்ந்த விஷயங்களில், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சவுதி அரேபியாவின் மன்னராக இருக்கும் மொஹம்மத் பின் சல்மான் (எம் பி எஸ்) 2018ல் அளித்த நேர்காணலில், “வெளிநாடுகளில் உள்ள மசூதி மற்றும் மதரசாக்களில் நாங்கள் முதலீடு (நிதிவுதவி) செய்வது பனிப்போர் காலத்தில் வேர் கொண்டதொரு விஷயம். முஸ்லிம் நாடுகளில் சோவியத் யூனியன் ஊடுருவாமல் தடுக்க சவுதி அரேபியாவின் செல்வாக்கை (வஹாபியிசம்) பயன்படுத்தும்படி நமது கூட்டாளிகள் (அமெரிக்கர்கள்) கேட்டுக்கொண்டனர்”, என்று கூறியுள்ளார்.
நேர்காணலில் எம் பி எஸ் வெளிப்படுத்திய விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அது துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்களின் சிந்தனையை தூண்டியிருக்க வேண்டும். அவர்கள் ‘உண்மையான’ இஸ்லாம் என்று நம்பி பின்பற்றியது அமெரிக்கா தன் புவி அரசியலுக்கு வசதியாக தணிக்கை செய்தது. அமெரிக்காவினால் தூண்டப்பட்ட இந்த இஸ்லாமிய வலை பின்னல் எத்தனை தற்கொலை படையினரை உருவாக்கியது, அவர்கள் மூலம் எவ்வளவு அப்பாவி உயிர்களை பலி வாங்கியது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
இஸ்லாத்துக்காக தன்னை வெடிகுண்டாக்கி கொண்டதாக நம்பியவர்களும் இஸ்லாத்துக்காக திரல் படுகொலை செய்வதாக நம்பியவர்களும் – இவர்களில் பலரும் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் – உண்மையில் அமெரிக்காவின் நலனுக்காகவே செத்திருக்கிறார்கள்.
அதே வேளையில், அரபுலகம் மாறிக்கொண்டே வருகிறது. எம் பி எஸ் தலைமையில் சவுதி அரேபியா தன்னுடைய சமூக, பொருளாதார கட்டமைப்பை மறுசீரமைக்க சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு நேர்மாறாக, இந்திய துணைக்கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பலரும் கடந்த காலத்திலேயே உறைந்து போய் காலனிய மனப்பான்மையை பற்றிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்த நாகரிகங்களை, பண்பாடுகளை தாழ்வாக கருதுகிறார்கள். துணைக்கண்டத்தில் உள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு முன்பிருந்த தொன்மையான நாகரீகங்களை மறுதலிப்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விஷயம். இதற்கு தெளிவான எடுத்துக்காட்டு இந்தோனேசியா , மலேசியா போன்ற நாடுகள்.
இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் தூதுவர் அப்துல் பஷீத் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை சொன்னார். ‘ அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால் நாங்கள் இந்தியாவை, மும்பாய் , தில்லி நகரங்களை தயங்காமல் தாக்குவோம். நாங்கள் அத்துடன் விட மாட்டோம். அதற்குப் பிறகு என்ன நடக்க வேண்டும் என்பதையும் பார்த்துக் கொள்வோம் ‘, என்று கூறினார். அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குனர் துல்சி கப்பார்ட் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டங்களை பற்றிய எச்சரிக்கைக்கு பதிலாக மேற்கண்ட அறிக்கையை அப்துல் பஷீத் வெளியிட்டார்.
இதுபோன்ற பேச்சுக்கள் கடுமையான வெறுப்புணர்வு மற்றும் அறிவீனத்தை வெளிப்படுத்துகின்றன. முஸ்லிம்களின் மனதில் இஸ்லாத்துக்கு முந்தைய நாகரிகங்களை பற்றிய ஆழமான ஒவ்வாமையே இதற்கு காரணமாகும்.
இந்த வேறுபாடு மத கருத்தியலால் மட்டுமே ஏற்பட்டதல்ல. மாறாக பண்பாட்டு ரீதியானது. ஆழமான, அறிவார்ந்த குழப்பம் நிலவுகிறது. அது உறுதியாகவும் இல்லை, விலகியும் இல்லை. அந்த குழப்பம் கருத்தியல் ரீதியில் மட்டுமல்ல நடைமுறையிலும் தெளிவாக வெளிப்படுகிறது.
முஸ்லிம் இளைஞர்கள் கங்கை நதியில் படகில் ஒன்றாக கூடி பயணித்ததை யாரும் ஆட்சேபிக்கவில்லை. அவர்கள் படகில் மாமிசத்தை சாப்பிட்டதையும் அதன் எச்சங்களை நதியில் துப்பியதையும் தான் கண்டனம் செய்கிறார்கள்.
இந்த விஷயத்தை, அற்ப விஷயம் என புறம் ஒதுக்கும் அரசியல் கட்சிகளின் வேகம் இந்தியாவின் பண்பாடு இலக்கணத்தை தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளதையே காட்டுகிறது.
சில விமர்சகர் இதே வாதத்தின்படி, ஹஸ்தியை கரைப்பது, நதியோரம் உள்ள சுடுகாடுகள், நீர்வாழ் ஊணுண்ணிகளும் பிரச்சனைக்குரியவையா என்று கேட்கிறார்கள்.
கங்கை வெறும் நதி அல்ல. ஹிந்துவின் கண்ணோட்டத்தில் அது புனிதமானது . போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரியது. வாழ்க்கையுடனும் மரணத்துடனும் மோக்ஷத்துடனும் தொடர்புடையது. எந்த ‘சட்டம்’ மீறப்பட்டுள்ளது ? என்று சிலர் கேட்கிறார்கள். இதை சற்றே நீட்டித்துப் பார்ப்போம். மசூதிக்கு அருகில் பன்றி இறைச்சி விருந்து நடத்தி, அதை சமூக ஊடகங்களின் யாராவது பகிர்வார்களா? அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறியதல்ல, சட்டத்திற்கு உட்பட்டதே. ஆனால் அது பண்பற்ற செயல். சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் உள்நோக்கத்துடன், திட்டமிட்டு மத மோதலை தூண்டிவிடும் செயலாகும்.
இதை அழுத்தமாக கூறும் ஒரு வரலாற்றுச் சான்றைப் பார்ப்போம். 1980 ஆகஸ்ட் 13ம் தேதி முராதாபாத்தில் ஈத் பண்டிகை நேரத்தில் கலவரம் மூண்டது. ஈத்கார் மைதானத்தில் ஒரு பன்றி வழி தவறி அங்கு நுழைந்துவிட்டது. இதனால் மூண்ட கலவரம் எல்லா இடங்களுக்கும் பரவி எண்ணற்ற உயிர் சேதமும் மிகுந்த பொருட் சேதமும் ஏற்பட்டது. அங்கு அமைதி திரும்ப ஒன்பது மாதங்கள் ஆனது.
அந்த வெறியாட்டத்திற்கு காரணமான சம்பவத்தை யாரும் புறமொதுக்கவுமில்லை. நியாயப்படுத்தவுமில்லை. அண்மையில் நடந்த சம்பவத்திற்கு ஏற்பட்ட எதிர்வினையை – இது அற்ப விஷயம் என்று புறம் ஒதுக்குவதை – கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவது கடினம். இந்த சமமற்ற அணுகுமுறையின் வேர்கள் ஏதோ சில சம்பவங்கள் என்பதால் அல்ல மாறாக வரலாற்று ரீதியிலான உணர்வினால் ஏற்படுகிறது.
இதை நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வி எஸ் நைபால் ” நம்முடைய உலகளாவிய நாகரீகம்” என்ற கட்டுரையில் கூரிய அவதானிப்புடன் படம் பிடித்து காட்டியுள்ளார்.
” எந்த காலனிய ஆதிக்கத்தையும் விட முற்றிலும் முழுமையான ஆதிக்கம் அரபு மத நம்பிக்கையுடன் வந்த காலனிய ஆதிக்கம் தான் என்பதை நான் சீக்கிரமே தெரிந்து கொண்டேன். தோற்கடிக்கப்பட்ட அல்லது காலனியாதிக்கத்திற்கு உள்ளான மக்கள் தங்கள் மீதே அவநம்பிக்கை கொள்ள தொடங்கினர். நான் பேசுகின்ற முஸ்லிம் நாடுகளில் எல்லாம் இந்த அவநம்பிக்கை மதத்தின் வலிமையான ஆதிக்கத்துடன் உள்ளது. அரபு மத நம்பிக்கையின்படி அதற்கு முன்பிருந்த எல்லா நம்பிக்கைகளும் தவறானவை, ஏற்புடையவை அல்ல. அரபு மத நம்பிக்கையை ஏற்றுக் கொண்டவர்களின் மனதிலோ சிந்தனையிலோ முகம்மதுவின் காலத்துக்கு முன்பிருந்தவற்றிற்கு இடமே கிடையாது. “
நைபாலின் கூற்றை புறம் தள்ளுவது கடினம். அது உளவியல் ரீதியான பிளவை காட்டுகிறது. முன்பு இருந்த கலாச்சார நினைவுகளில் இருந்து விலகுவதை வலியுறுத்துகிறது. இதுதான் அரபு மத நம்பிக்கையின் ஆதிக்கத்திற்கு உள்ளான பின்பு உருவான சமுதாயங்களின் அடையாளம் . இந்திய துணைக் கண்டத்தில் இந்த உளவியல் பிளவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ? அல்லது உம்மா – இஸ்லாமிய அகிலம் – என்ற கானல் கனவை பின் தொடரும் காலனிய மனப்பான்மையினால் முட்டுசந்தில் மோதி நிற்பதா ? என்பதை சிந்தித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது.
நன்றி : பயோனியர் நாளேடு



