
— அத்வைத கலா —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளாக மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அலுப்பூட்ட கூடிய, அரை வாழ்க்கையை கண்டு வருகிறது. மீண்டும் மீண்டும் சட்டம் இயற்றப்படும். சில நேரங்களில் நிறைவேற்றப்படும். ஒருபோதும் நடைமுறைக்கு வராது. ஏப்ரல் 17 தேதி அரசமைப்பு சட்டத் திருத்தம் (131) முன் வைக்கப்பட்டது. அது 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 ல் நடைமுறைப்படுத்துவதாக கூறியது . மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு 54 வாக்குகள் குறைவாக இருந்ததால் அது தோல்வி அடைந்தது. வாய்ப்பை நழுவ விட்டதில் ஏழாவது முறை இது.
தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும்போது, எதிர்பார்த்தபடியே எதிர்கட்சிகள் தொகுதி மறு வரையறையை இத்துடன் இணைத்தது தவறு. இதனால் மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்னக மாநிலங்கள் பாதிக்கப்படும். இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றி வரைவதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஒரு கேடயமாக பயன்படுத்தப்படுகிறது, என்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை பிரித்து விட்டால், 2023 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் படி மகளிர் இட ஒதுக்கீடு 2034 க்கு முன்பு நடைமுறைப்படுத்த முடியாது, என்றது அரசு.
இரண்டு தரப்பினர் சொல்லுவதிலும் சில நியாயங்கள் இருக்கலாம். ஆனால் இரு தரப்பினர் சொல்லும் சட்ட நுட்பத்திற்கு அடியில் பழைய , யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்பாத கோரமான உண்மை புதைந்துள்ளது. பெரும்பாலான ஆண் உறுப்பினர்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதை விரும்பவில்லை என்பதே அந்த உண்மை.
இந்த உண்மை ஆவணங்களில் பதிவாகி உள்ளது. 1996 இல் முதல் முறையாக இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அது எதிர்க்கப்பட்டது, தடுக்கப்பட்டது, காலாவதியாகும்படி விடப்பட்டது . மீண்டும் 1998 இல் அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவே விடவில்லை. அவை கலவர பூமியாகியது. இந்த சட்டம் இயற்றப்பட்டால் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து விசிலடிக்கத் தூண்டும் என்று அன்று முலாயம் சிங் சொன்னது இன்றும் இழிப்புகழாக நீடிக்கிறது. இது ஆண் உறுப்பினர்களின் மனநிலையை படம்பிடித்து காட்டுகிறது.
பிற்பட்ட வகுப்பினருக்கு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் பங்குண்டா என்ற பொது விவாதங்களுக்கு அப்பால் இப்போதுள்ள ஆண் உறுப்பினர்களிடையே ஒரு எழுதப்படாத, கமுக்கமான கருத்தொற்றுமை உள்ளது. 33 சதவீத இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் வரும்போது தங்களுடைய இடம் பறிபோய்விடும் என்ற தனிப்பட்ட அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.
2023 வரையிலும் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒரே பக்கம் நின்றதாக வரலாறு இல்லை. பாஜக எந்த நிலையிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்க தவறியது இல்லை. அது எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் ஆளும் கட்சியாக ஆனபோதிலும், எப்போதும் இதை ஆதரித்தே வந்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். 2023 அபூர்வமான கணத்தை உருவாக்கியது. காரணம் தனிப்பட்ட முறையிலும், ஒட்டுமொத்தமாகவும் இந்த இட ஒதுக்கீடு மசோதா அடுத்த தேர்தலுக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வரும் என்று பாதுகாப்பாக எழுதப்பட்டது தான்.
இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெண்களால் முடிவு செய்ய முடியாததற்கு இந்த கணக்கே காரணம். லோக்சபாவில் 15 சதவீதம் உள்ள பெண்களால் ஆண்களின் ஒத்துழைப்பு இன்றி, இந்த சட்டத்தை இயற்ற முடியாது. எண்ணிக்கை குரூரமாகவும் வட்டமடிப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் எண்ணிக்கை பலம் பெற இட ஒதுக்கீடு தேவை. இட ஒதுக்கீடு பெற எண்ணிக்கை பலம் தேவை. இந்த வட்டத்திலிருந்து வெளியேற ஆண் அரசியல்வாதிகளின் ஆதரவு தேவை. சீர்திருத்தத்திற்காக தங்கள் அரசியல் முதலீட்டை பணயம் வைக்க, குறைந்த காலத்திற்காவது தங்கள் இடத்தை இழக்கும் அபாயத்தை மீறி செயல்பட , ஆண் அரசியல்வாதிகள் முன் வர வேண்டும்.
இந்த விஷயம் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கவனிக்க வைக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (21 ஏப்ரல்) லக்னோவில் இட ஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டதற்கு எதிராக பெண்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த பேரணி (ஜன் ஆக்ரோஷ் மகிளா பாதயாத்ரா) நடத்தினார்கள். வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் 1.75 கிலோமீட்டர் தூரம் அந்த பேரணியில் தனது இரண்டு துணை முதல்வர்கள், மாநில பாஜக தலைவர், பெண் அமைச்சர்கள் மற்றும் ஆயிர கணக்கான பெண்கள் அணிவகுக்க தலைமை ஏற்று நடந்து சென்றார். மசோதா தோல்வியடைந்தது எதிர்க்கட்சிகளின் பெண்கள் விரோத மனப்பான்மையையே காட்டுகிறது என்று அவர் சாடினார். விமர்சகர்கள் இதைப் பக்க சார்புள்ள நிலைப்பாடு என்றனர். ஆனால் இதில் உள்ள புதிய விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
செல்வாக்கு மிக்க முதல்வர்; 131 சட்ட திருத்தத்தால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாதவர்; பெண் அல்ல, ஆண்; அரசியல் நாடகத்திற்காக அல்ல; பெண்கள் உரிமைக்காக பேரணியில் நடந்து செல்வது இந்திய அரசியலில் அன்றாட நிகழ்வு அல்ல. 1996 முதல் நாம் பார்த்து வருவது என்ன? அரசியல் ஆகாயத்திற்காக, வெளிப்படையாக அனுதாபத்தை தெரிவித்து விட்டு, அமைதியாக கடந்து செல்லும் ஆண் அரசியல்வாதிகளைத்தான். லக்னோவில் நடந்தது, அரசியல் கணக்கு என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், அந்த வழமையை உடைத்தெறிந்துள்ளது.
இதுபோன்ற வெளிப்படையான, எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பது, கணக்கு பார்க்கும் இதர ஆண் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். முதல்வரே நடக்கும்போது கடைசி வரிசையில் அமர்ந்திருப்போர் அமைதியாக இருக்க முடியாது. அவர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று என்று சுலபமாக முணங்கிக் கொண்டு உட்கார்ந்திருக்கவும் முடியாது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பயன்படுத்தி பாஜக தொகுதி மறு வரையறை செய்யும் திட்டத்தை திணிக்கிறது. அது தன்னளவில் தனியாக விவாதிக்கப்பட வேண்டியது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர் . ஆனால் கடினமான எதிர் கேள்விக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். தொகுதி மறு வரையறை தான் பிரச்சனை என்றால் அது இல்லாமல் 33 சதவீதம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கட்சியினர் எப்போதாவது கொண்டு வந்திருக்கிறார்களா? கடந்த 30 ஆண்டுகளில் எந்த கட்சியும் இதை செய்யவில்லை. எதிர்ப்பை மட்டுமே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
கடந்த வாரத்தில் நமக்கு கிடைத்த சங்கடமான பாடம் என்ன ? இந்திய அரசியலில் பெண்கள் கருத்தியல் ரீதியான கூட்டாளிகளை தேர்வு செய்ய வாய்ப்பில்லை. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திமுக, திருணாமுல் காங்கிரஸ் என்று எல்லா கட்சியிலும் நல்ல நோக்கம் உள்ள ஆண் அரசியல்வாதிகள் தங்கள் தங்கள் பகுதியில் யோகி ஆதித்யநாத் செய்தது போல் பேரணி நடத்தி, உரை நிகழ்த்தி, வாக்களித்து, மீண்டும் பேரணி நடத்த வேண்டும் என்பதே பெண்களுக்கு இப்போது தேவைப்படுகிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் விருது பெற்ற எழுத்தாளர்



