மதுரையில் கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்
மதுரை: மதுரையில் தொடர்ந்து 150 நாட்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ஒரு பெண்மணி.
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் போதிலட்சுமி. இவர், கடந்த ஐந்து மாதங்களாக தினசரி வீட்டு வாசலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலங்கள் போட்டு வருகிறார்.
தீபத்துக்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தினால் நோய்த் தொற்று அகலும்,
குடியை கைவிட அரசு மறுவாழ்வு மையங்களை அதிகப் படுத்த வேண்டும்,
மதுபழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்
அயராது உழைத்தால் உயர்வு தரும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை போதிலட்சுமி, தினசரி காலை வீட்டு வாசலில் கோலம் போடும் போது எழுதி வருகிறார். இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும், இவர் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களையும், அவ்வப்போது கோலத்தின் மேலே தீட்டி வருகிறார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நல்ல பிரசாரம் தேவை. அந்த பிரசாரத்தையே, மக்களை கவரும் வகையில், எல்லோரும் தினசரி பார்க்கும் வகையில் தொடர்ந்து 150 நாட்களாக கோலம் வரைந்தும், அதில் ஊடே விழிப்புணர்வு வாசகங்களை வரைந்துள்ளேன் என்றார்.
இவர் செய்த இந்த புதுமையான விழிப்புணர்வானது, மதுரை ஆத்திக்குளம் பகுதியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை