தமிழக மாணவர்க்கு ’நீட்’ தேவையில்லை என பிரச்சாரம்! இரட்டை வேடமிடும் திமுக! தமிழக மக்களே புரிந்து கொள்வீர்.. என்று இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது..
01. +2 முடித்த மாணவ மாணவியர்கள் “நீட்” என்கின்ற தேசிய அளவிலான தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
02.நீட் தேர்வு வருவதற்கு முன்பு +2 முடித்த பிறகு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவர் ஆக வேண்டும் என்பது பணம் படைத்த பலருக்கான படிப்பாக இருந்தது.
03.பணம் படைத்த மருத்துவர்களின் பிள்ளைகள் மற்றும் பணக்காரர்கள் 50 லட்சம், 60 லட்சம், ஒரு கோடி வரை கொடுத்து மருத்துவ சீட்டை விலைக்கு வாங்கி தங்கள் பிள்ளைகளை டாக்டராக்கி கொண்டிருந்தார்கள்.
04.”நோட்டு” கொடுத்து சீட்டு வாங்கி மருத்துவரான பலர் பணம் சம்பாதிப்பதையே பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டிய மருத்துவத்தை பணம் பெருக்கும் தொழிலாக மாற்றினார்கள்.
05.ரூபாய் “நோட்டுகள்” நிர்ணயித்த மருத்துவக் கல்லூரி இடங்களை “நீட்(NEET)” என்கின்ற தேர்வு மருத்துவ படிப்பை ஏழை பணக்காரன் என்கிற பேதமில்லாமல் அறிவு வளமையை கொண்டு தேர்ச்சி பெற வேண்டும் என்று சமன் செய்தது.
06.மருத்துவக் கல்லூரிகள் நடத்தக் கூடியவர்கள் பெரும்பாலும் ஏதாவது அரசியல் கட்சி அல்லது அரசியல் கட்சியை சார்ந்தவர்களின் ஆதரவோடு இருக்கக் கூடியவர்கள்.
07.நீட் என்கின்ற தேர்வு முறை வந்ததால் இந்த மருத்துவக் கல்லூரி அதிபர்கள் மருத்துவ சீட்டு விற்பனையை நினைத்த விலையில் விற்க முடியவில்லை.
08.தரகர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் கோபமுற்று தான் போராட்டங்களை பல அமைப்பு பெயர்களைக் கொண்டு தூண்டி விட்டார்கள்.
09.நீட் தேர்வு வந்த காரணத்தால் ஏழை முடிதிருத்தும் தொழிலாளி மகன்,வாட்ச்மேன் மகள் ஆட்டோ ஓட்டுபவரின் மகன்கள்……. இப்படி சமூகத்தில் சாதாரண பட்ட ஏழைகளின் பிள்ளைகள் கூட மருத்துவர் ஆகி (டாக்டர்) ஆகிவிடுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாமல் குறிப்பாக தமிழ்நாட்டில் தான்” நீட் தேர்வு தேவையில்லை “என்று எதிர்மறை பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
10.நீட் தேர்வில் வெற்றி பெற அச்சம் கொண்டு தற்கொலை மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
11.இதற்கு காரணம் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தான்.
12.அனிதா என்கின்ற மாணவி தி மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்த பிறகுதான் தற்கொலை செய்து கொள்கிறார். திமுக உள்ளிட்ட பலர் அனிதாவை “நீட் எதிர்ப்பு போராளி” ஆக்கி அரசியல் செய்யத் தொடங்கினார்கள்.
13.நீட் தேர்வில் ஒரு முறை தோல்வி அடைந்தால் மேலும் பல முறை தேர்வு எழுத வாய்ப்புக்கள் இருக்கும் பட்சத்தில் ஏன் இவர்கள் தற்கொலை செய்ய வேண்டும்?
14.உடனே மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்று நாள்தோறும் அறிக்கை விடும் கட்சிகள் நீட் தேர்வை நிராகரித்து விடு என்று கூத்தடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
15.திமுக எம்பி கனிமொழி சொல்கிறார் இந்த மாணவர்கள் தற்கொலை மரணங்களுக்கு காரணம் “அதிமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தான்” என்கிறார்.
16.நீட் தேர்வு சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு, அதை மறுபரிசீலனை செய்யக் கூடாது என்று வாதிட்டவர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள் என்பதை லாவகமாக மறந்து விடுகிறார்கள்.
17.நீட் தேர்வு தேவையில்லை என்று வேறு எந்த மாநிலத்திலும் தற்கொலை மரணங்கள் நிகழாத போது தமிழகத்தில் மட்டும் நடக்கக்கூடிய சம்பவங்கள் தூண்டுதல் காரணிகளாக ஊடகங்கள் ஒரு சில கட்சிகள் இருக்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது
18.”நீட் “தேர்வு தேவையில்லை; நிராகரிப்பு செய்வோம்” என்று அறிக்கை விடக் கூடிய திமுக தலைவர்கள் நடத்தக்கூடிய கல்லூரிகளில் “நீட் தேர்வு நடத்த மாட்டோம் போடா “என்று கல்லூரியை மூடினார்களா? இல்லை கல்லூரிகளை திறந்து வைத்து தேர்வு எழுத அனுமதித்தார்களா? என்பதற்கு கனிமொழி அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
19.பல தேர்தல்களில் தோல்வியுற்று அரசியலில் இன்று இருக்கக் கூடிய எந்த தலைவனும் தற்கொலை செய்து கொள்ளாத போது , நீட் தேர்வு என்கின்ற அச்சத்தை உருவாக்கி, மனப் பதற்றத்தை உருவாக்கி பலவீனப் படுத்தி தற்கொலைக்குத் தூண்டுவது மிகப்பெரிய குற்றம்.
20.அதை செய்யக்கூடிய கட்சிகள் நபர்கள் ஆகியோரை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
21.இதுவரை நீட்தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று பரப்பக் கூடிய அத்தனை மரண சம்பவம் குறித்து சிறப்பு விசாரணையை அரசு முன்னெடுக்க வேண்டும்.
22.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் உண்டு.
23.+2 படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று மாணவர்கள் மனமுடைந்து தங்களை மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் உண்டு.
24.அதற்காக பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளை நடத்த கூடாது ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கனிமொழி போன்ற அறிவுஜீவிகள் குரல் எழுப்பினாலும் எழுப்புவார்கள்
25.ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப்எஸ் ….. என்று பல தேர்வுகள் நடக்கும்போது பலமுறை தோல்வியுற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது நடைமுறை.
26.அதற்காக அந்த தேர்வு முறையே கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
27.மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது சம்பந்தமாக நேர்மறையான சிந்தனைகளை விதைத்து நல்வழி காட்டுதல், செய்யக்கூடிய உதவிகளை ஊடகங்களும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் செய்யாமல், எதிர்மறை கருத்துக்களை விதைப்பது என்பது படித்து பட்டம் பெற வேண்டிய மாணவர்களுக்கு மன குழப்பத்தை உருவாக்க கூடிய செயல் கண்டனத்துக்குரியது.
28. மாணவர்களுக்கு செய்யும் துரோகம்.
29.நீட் தேர்வு நடைபெறும் இந்த நாளில் நீட் தேர்வுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட கூடிய நபர்களை பாருங்கள்!!
30.அவர்களில் எத்தனை பேர் மாணவர்கள்? எத்தனை பேர் மாணவ அமைப்பினர்? எத்தனை பேர் கல்வி வியாபாரிகளின் கைக்கூலிகள்; எத்தனை பேர் சர்ச்சுகளின் ஏவலாட்கள்? என்பது குறித்து அரசு தீர விசாரிக்க வேண்டும். மக்களும் தெளிவடைய வேண்டும்.
31.தமிழக அரசு மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற தேவையான பயிற்சி வகுப்புகளை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
32.மாணவர்களின் மன குழப்பத்தை சரி செய்ய “கவுன்சிலிங் சென்டர்” உருவாக்கி தற்கொலை தீர்வு அல்ல;படித்து பட்டம் பெற ஆக்கபூர்வமான வழிமுறையை உருவாக்க வேண்டும்.
33.மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்களா என்பதை கண்காணித்து அவர்களுக்கு மனக் குறைகள் இருந்தால் தங்களிடம் பேசும்படியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
34.மதிப்பெண் கல்விக்காக “பிராய்லர் கல்வி மாணவர்களாக” உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சிக்கக் கூடாது.
35.”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்” “என்று ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தால் மாணவ, மாணவியர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்பது உறுதி. நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள். .. என்று தெரிவித்துள்ளார்.