நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, நீதிமன்றம் இந்தக் கொரோனா நேரத்தில் தங்களை மட்டும் பாதுகாத்துக்கொள்ள வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செயல்படுகிறது. ஆனால் மாணவர்கள் மட்டும் நேரில் சென்று தேர்வு எழுத வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இது நீதிமன்ற அவமதிப்பு என்று ஒரு நீதிபதி கடிதமெழுத, அதற்கு பதில் சொல்லி 5 முன்னாள் நீதிபதிகள் கூட்டமைப்பு சூரியா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கடிதம் எழுத, இப்போது சென்னை உயர் நீதிமன்றமும் சூரியா பேரில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், கொரோனா பேரிடர் காலத்திலும் அர்பணிப்புடன் நீதிபதிகள் பணியாற்றியதாகவும், காணொலி மூலமாக 42,233 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யா தெரிவித்த விமர்சனம் அவசியமில்லாத ஒன்று என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வை தடை செய் என்று கோரி சூரியாவின் பேச்சுகளுடன், ரசிகர் மன்றத்தினர் தென்காசியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்காசி காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.