தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் புகழ் பெற்ற தசரா திருவிழா சனிக்கிழமை இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .
இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து,
காலை 10.45க்கு கொடிப்பட்டம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10ஆம் நாள் விழா சூரசம்ஹாரம் வரும் 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவில் நடைபெறுகிறது..
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சனிக்கிழமை இன்றைய முதல் நாள் நிகழ்ச்சி மற்றும் முக்கிய விழா நாளான 10ம் நாள் விழா, 11ஆம் நாள் திருவிழா நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட மாட்டார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
2ஆம் நாள் திருவிழா முதல் 9ஆம் நாள் திருவிழா வரையிலும், விழா நிறைவு நாளிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அரசின் வழிகாட்டுதல்படி தினமும் 8 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள் வரிசையாக செல்லவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் கோவில் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது கிருமிநாசினி தெளிப்பர். பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும், கைகழுவும் கிருமிநாசினி திரவம் கொடுத்து, கைகளை சுத்தமாக கழுவச் செய்யவும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றின் பிறகே பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப் படுவர்.