பாஜக., நடத்தும் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் ம மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் பங்கேற்க உள்ளதாகவும், வரும் 7ஆம் தேதி திருச்செந்தூரில் இந்த நிறைவு விழா நடைபெற இருப்பதாகவும் மாநிலத் தலைவர் எல்.முருகன் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக., சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் நவ.6 ஆம் தேதி, வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கி வைத்தார். ஆனால், ஒவ்வொரு நாளும் காவல் துறையினர் யாத்திரையில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்தி ஆங்காங்கே கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இதனிடையே, வட மாவட்டங்களில் நிவர் புயல் பாதிப்பு காரணமாகவும், மீட்புப் பணிகளில் பாஜக., நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் வெற்றிவேல் யாத்திரை இடையில் நிறுத்தப்பட்டது. இதனால், அறுபடை வீடுகளில் யாத்திரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற திட்டமிடலில், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய ஆலயங்களில் தரிசனம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, வரும் 5ஆம் தேதி இந்தத் தலங்களில் வெற்றி வேல் யாத்திரை தரிசனம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதே நேரம் வெற்றிவேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி வரும் 7ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெறவுள்ளது. இந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், தமிழக பாஜக., பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் தனது டிவிட்டர் பதிவிலும் தெரிவித்துள்ளார்.