நாளிதழ் ஒன்றின் சார்பில் ராஜபாளையத்தில் ஞாயிறு அன்று நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசினார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் குறித்து ஆற்றிய சொற்பொழிவில், அவர் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் பலர்.
இந்நிலையில், பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. என்று கூறி, தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.
இது குறித்த அவரது அறிக்கையில்,
பாவை நோன்பு மாதமாகிய மார்கழி மாதத்தில், திருப்பாவை இயற்றிய, ஆழ்வார்களில் ஒருவராகிய ஆண்டாள் நாச்சியாரை கொண்டாட ராஜபாளையம் திருக்கோயிலில் விழா நடைபெற்றது. இவ்விழாவானது, பாரம்பர்யமிக்க தினமணி நாளிதழ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு பேசிய, வைரமுத்து, ஆண்டாள் ஒரு தாசி என பேசியது பக்தர்களின் மனங்களை புண்படுத்தும் செயல். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. வயிற்று பிழைப்பிற்காக தமிழ் மொழியை பேசி திரியும் வைரமுத்துவிற்கு, ஆண்டாள் நாச்சியாரைப் பற்றி பேச அருகதை உண்டா? நிச்சயம் கிடையாது. இதுபோன்ற அவதூறான கருத்தினை பேசிட எது இவருக்கு துணை நிற்கிறது, எது காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இப்படி இவர் பேசிய இடம் திராவிட கழகத்தின் கூட்டமும் இல்லை, அது நாத்திக மேடையும் இல்லை.. அப்படியிருக்க இதுபோன்ற பண்பாட்டு மேடையில் இவரை பேச அழைத்து வந்தவர்களுக்கு கிடைத்த பரிசு தான் இவர் கூறிய கருத்து.
தமிழகத்தில் மட்டுமல்ல, இம்மாதத்தில் உலக முழுவதும் தமிழ் சமுதாயம் ஆண்டாளின் திருப்பாவை விழா கொண்டாடப்பட்டு வருவதை காண்கிறோம்.
ஔவையாரும், ஆண்டாளும் தமிழ் சமுதாயத்திற்கு செய்துள்ள சேவைக்கு, உலகம் உள்ள அளவும் தமிழர்களாகிய நாம் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்துக்கள் தங்களை உணர்ந்துவிட்டார்கள். இதுபோன்ற நச்சு கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பார்கள். வைரமுத்து, தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இல்லையேல் அவரது கருத்திற்கு உரிய பதிலை அவருக்கு புரியும் மொழியில் மக்கள் அளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.