இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு மற்றும் முதுமை காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 88. தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தா.பாண்டியன் சிறுநீரகச் செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் புதனன்று சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் இன்று காலமானார்.
அவர் உடல் முதலில் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
1991 மே 21ஆம் நாள் திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தியின் பேச்சை மொழிபெயர்தார் தா.பாண்டியன். அப்போது குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சென்னைப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
25 செப்டம்பர் 1932 இல் பிறந்தவர். இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். இவர் 1989, 1991 தேர்தல்களில் வடசென்னைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு – இந்திய ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார்.
இவருக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முன்னதாக, இவரது மனைவி ஜோயிஸ் பாண்டியன் 2010ல் அவரது 76-ஆம் வயதில் காலமானார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சகோதரர் திரு.தா.பாண்டியன் அவர்கள் காலமான செய்தியறிந்து அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்… என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பொதுவுடைமைப் போராளி – ஒடுக்கப்பட்டோரின் போர்க்குரல் – பண்பாளர் – தமிழ் மண்ணை அடிமையாக விடமாட்டோம் என சிம்மக்குரல் எழுப்பிய #தா_பாண்டியன் மறைவு பொதுவுடைமைக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பேரிழப்பு. #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் அஞ்சலி செலுத்தினோம். ஆழ்ந்த இரங்கல்! என்று குறிப்பிட்டுள்ளார் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் மறைவிற்கு தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்