வேலூர் அருகே கொலை முயற்சி வழக்கு விசாரணைக்காக சென்ற காவல் துறையினர், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் போலி மதுபானஆலை இயங்கியதை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கிருந்து , 430 மதுபானபாட்டில்கள், போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடிகளையும் பறிமுதல் செய்து தலை மறைவான கட்டிட மேஸ்திரியை தேடி வருகின்றனர்.
வேலூர் அருகே உள்ள சாத்துமதுரை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஜெயசித்ரா. இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ஜெயசித்ராவின் தம்பி சந்துரு (22) என்பவர் நேற்று முன்தினம் சதீஷ்குமார் வீட்டுக்குச் சென்று தட்டிக்கேட்டார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த சதீஷ்குமார் கத்தியால் சந்துருவின் வயிற்றில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி மற்றும் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். வழக்கு விசாரணைக்காக சதீஷ்குமாரை கைது செய்ய அவரது வீட்டுக்கு நேற்று காலை சென்றனர்.
காவல் துறையினரைப் பார்த்ததும் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை.
சதீஷ்குமாரின் வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு மூட்டையை சந்தேகத்தின்பேரில் காவல் துறையினர் பிரித்துப் பார்த்தனர். அதில், மதுபான பாட்டில்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சதீஷ்குமாரின் வீட்டுக்குள் சென்று சோதனையிட்டனர். அங்கு, போலி மதுபான பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், பாட்டில்கள் மீது ஒட்டக்கூடிய ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி பொருத்தும் இயந்திரம் உள்ளிட்டவை இருந்தது. மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 430 மதுபான பாட்டில்களும் இருந்தன.
இவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ள சதீஷ் குமாரை தேடி வருகின்றனர்.
போலி மதுபான பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், எத்தனை நாட்களாக இந்த தொழிலில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பாட்டில்கள் போலி யானதா? அல்லது டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து வாங்கி வரப்பட்டு கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.