தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை மாலையில் பெய்தது. இன்று முற்பகல், தென்காசி, நெல்லை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த தகவல்:
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உள் கர்நாடகா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி, நெல்லை, கோவை, தென்காசி மற்றும் நீலகிரியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் .
இதர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் வறண்ட காலநிலை நிலவும். 7, 8ஆம் தேதிகளில் மாநிலத்தில் வறண்ட கால நிலையும், 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறைந்துள்ளது. எந்த பகுதியிலும் அனல் காற்று வீசாது. கடலோர மாவட்டங்களில் இயல்பான வெப்ப நிலையும், உள்மாவட்டங்களில் அது சற்று அதிகரித்தும் காணப்படும். காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் 2 செ.மீ.மழை பதிவானது.