தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 1வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலை ஜூன் 17-க்குள் சரிபார்த்து பதிவேற்ற வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதி மதிப்பெண் கணக்கீடு குழப்பங்களை தவிர்க்க மதிப்பெண் சான்றிதழ்களில் ‘தேர்ச்சி’ என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இரு வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை சரிபார்த்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு ஏதுவாக தங்கள் பள்ளிகளில் இந்த வகுப்புகளில் படித்த மாணவர்களின் விவரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலை தலைமையாசிரியர்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) சரிபார்த்து பதிவேற்ற வேண்டும்.
இந்த பணிகளை நாளை (ஜூன் 14) தொடங்கி ஜூன்17-க்குள் முடிக்க வேண்டும். இதன்அடிப்படையில்தான் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கவுள்ளதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.