தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் நிலவரம் குறித்தும் மேற்கொள்ளப் பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி,
தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது.
மாவட்டங்களில் உள்ள நோய் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஏற்கனவே மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருந்தன.
வகை ஒன்றில், 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் வகை 1இல் உள்ளன.
வகை 2-ல் 23 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை ,சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் வகை 2ல் பிரிக்கப்பட்டுள்ளன.
வகை 3-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன
வகை 1ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
இங்கு, காலை 6 முதல் மாலை 7 மணி வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மின் சாதனங்கள் விற்பனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
கல்வி புத்தகங்கள், எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
பாத்திரக் கடைகள், பேன்சி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ, வீடியோ கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெராக்ஸ், சலவை, தையல் அச்சகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.
வகை 2ல் இடம்பெற்றுள்ள 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இந்த 23 மாவட்டங்களுக்கு இடையே 50% இருக்கைகளுடன் பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
வகை 3ல் உள்ள 4 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப் படுகிறது. கோயில்களில் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.
இந்த 4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நகை கடைகள் செயல்பட அனுமதிக்கப் படும். குளிர்சாதன வசதியின்றி அனைத்து துணி கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படுகிறது.
4 மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து துணி கடைகள் செயல்பட அனுமதிக்கப் படும்.
தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும்.
வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி, வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப் படும்.
திரையரங்குகள், விளையாட்டு கூடங்கள் செயல்பட அனுமதியில்லை என அறிவிப்பு
வகை 2, வகை 3 மாவட்டங்களில் பொதுவான தளர்வுகள்:
சென்னை உள்பட 4 மாவட்டங்கள் மற்றும் 23 மாவட்டங்களில் பொதுவான தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும்.
காலை 10 – மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் செயல்பட அனுமதிக்கப் படும்.
அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதிக்கப் படும்.
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்கு இ பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப் படும்.
வீடு பராமரிப்பு சேவைகளுக்கு, பிளம்பர், மின் பணியாளர், தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் இ பதிவு இல்லாமல் பணிபுரிய அனுமதிக்கப் படும். காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை சுய தொழில் செய்பவர்கள் பணிபுரிய அனுமதிக்கப் படுவர்.
அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும். வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், ஏடிஎம் சேவைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும்.
தகவல் தொழில் நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப் படும்.
திருமண அனுமதி தொடர்பில், வகை 2, 3 ல் உள்ள மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் – இ பதிவு தேவையில்லை. அதே நேரம், வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ் அவசியம் உண்டு.