ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நகரிலிருந்து கடைசி ஏர் இந்தியா விமானம் தில்லிக்கு புறப்பட்டு 129 இந்தியர்களும் இரவு பத்திரமாக தாயகம் திரும்பினர்.
2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்க இரட்டை கோபூர தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்க படைகள் தலிபான்களை காபூலிலிருந்து விரட்டி அடித்தது.
தற்போது ஆப்கனை விட்டுவிட்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி வரும் நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூலுக்குள் மீண்டும் தலிபான்கள் நுழைந்துள்ளனர்.
நாலாபுறங்களிலிருந்தும் தலைநகருக்குள் அவர்கள் நுழைந்து கொண்டிருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரி ராய்டர்ஸ் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ஆப்கன் பொறுப்பு உள்துறை அமைச்சர் அப்துல் சத்தார், டோலோ செய்திக்கு அளித்த பேட்டியில் “இடைக்கால நிர்வாகத்திடம் அதிகாரம் மாற்றப்படும். நகரத்தின் மீது தாக்குதல் இருக்காது. அமைதியான முறையில் அதிகாரத்தை ஒப்படைக்க ஒப்புக்கொண்டிருப்பதாக” கூறியுள்ளார்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், அமைதியான முறையில் காபூலை ஒப்படைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐ.நா., அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் தங்களின் தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது.
இந்தியாவிற்கான கடைசி ஏர் இந்தியா விமானமும் காபூலிலிருந்து தற்போது புறப்பட்டு 129 இந்தியர்களும் பத்திரமாக தில்லி வந்திறங்கினர். இந்தியாவிலிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் காபூலுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், இனி இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.