திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தரிசனம் செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு வருபவர்களால் மற்றவர்களுக்கு தரிசனம் செய்ய சலுகை கிடைப்பதில்லை என்று ஆந்திர மாநில அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, தினந்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக் கூடிய நிலை உள்ளது. சிபாரிசுகள் மூலம் ஒருவரே பல முறை தரிசனம் செய்ய வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் பெருமாளை தரிசனம் செய்து வைக்க இயலாமல் தேவஸ்தான அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்துவிட்டு, வருகையாளரைக் கட்டுப் படுத்த வேண்டும். ஓர் ஆண்டில் முதல் முறை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதன் பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தசரிசனத்திற்கு மற்றவர்களுக்கு அனுமதிக்கலாம் என்று அவர் யோசனை கூறினார்.
இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் பக்தர்கள் பலர் பயனடைவார்கள் என்று கூறிய அவர், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் கூறினார்.