நெல்லை மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதர் கோயில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மை, கணபதி, முருகர் திருத்தேர் உலா இன்று காலை நடைபெற்றது. சிவனடியார்கள் வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய ரத வீதிகளின் வழியாக தேர் வலம் வந்தது.
அப்போது தனியார் விடுதிகளின் கழிவு நீர் சாலை வழியாக வழிந்தோடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. தேரோட்டம் நடைபெறும் நேரத்தில், பக்தர்கள் கால் வைத்து தேரை இழுத்துச் செல்லும் நேரத்தில், இறைவன் தேர் ரத வீதியில் வரும் சூழலில், அந்தப் பகுதியை தூய்மையாக்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத அறநிலையத்துறையை பக்தர்கள் திட்டித் தீர்த்தும் சபித்தபடியும் சென்றனர்.
குறிப்பாக, கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறினர் அன்பர்கள்.
தனியார் தங்கும் விடுதிகளின் சாக்கடைக் கழிவுகள், குளியலறை டாய்லட் கழிவுகள் ரதவீதியில் வழிந்தோடி, துர்நாற்றம் வீசியது. மேலும், அங்கே உள்ள மட்டன் ஸ்டால்களில் இருந்து வெளியே வீசப் படும் இறைச்சிக் கழிவுகள், இறைச்சியைக் கழுவும் கழிவு நீர் ஆகியவை கோயில் தெப்பக் குளத்தில் போடப் படுவது குறித்து பல முறை புகார் கொடுத்தும் அறிவு கெட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் கோயில் தெப்பக்குளம் முழுவதும் சாக்கடைக் கழிவுகள் பெருகி, தெப்பக்குளமே காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள், தமிழக அரசு உடனடியாக குற்றாலம் கோவில் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தனர்.
தேர் ஓடும் வீதியில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு தெருவை சுத்தம் செய்து, இறைவனே தங்கள் வீதியில் தங்களைப் பார்ப்பதற்காக வருகிறார் என்பது தான் இந்துக்களின் நம்பிக்கை. அந்த அடிப்படையிலேயே இறைவனை வரவேற்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்கின்றனர். ஆனால், சாக்கடைக் கழிவுகளை ரத வீதியில் கொட்டி, இறைவனை அசிங்கப் படுத்தியதுடன், இந்துக்களின் நம்பிக்கையை கொச்சைப் படுத்தியுள்ளனர் அறிவு கெட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் என்கின்றனர் பக்தர்கள்.
144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்; ஆண்டவா இவர்களுக்கு முதலில் நல்ல அறிவை கொடு என்று வேண்டிக் கொண்டதாக தேர் இழுத்த பக்தர் ஒருவர் கூறினார்.