தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த அனுமதி உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திறக்கத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற 100-வது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து மே 28-ஆம் தேதி ஆலையை மூடியது.
இதை அடுத்து, ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது.
அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வு செய்தது.
இதை அடுத்து, ஆய்வின் முடிவில் அளிக்கப் பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என அனுமதி வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.
இந்நிலையில் இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது, தமிழக அரசு தங்களுக்கு பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்துவதாக, வேதாந்தா நிறுவனம் எதிர் புகார் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், வேதாந்தா நிறுவன மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்ததுடன், வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கூறியது.