கத்திரி வெயில் போல் சுட்டெரிக்கப் போகிறது! நாளை முதல் வெப்பத்தின் தாக்கம் எகிறும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் தாகத்தை தீர்க்க ஜூஸ், மோர் என குளிர்ச்சியான பொருட்களை நாடி வருகின்றனர்.
காலை 10 மணிக்கு மேல் நேரம் செல்ல, செல்ல வெப்பம் கொளுத்துகிறது. மதிய வேளைகளில் சாலைகளில் கானல் நீர் தெரியும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதன் காரணமாக இரவு கடும் புழுக்கமாக உள்ளது என்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்கு வறட்சியான வானிலையே நிலவுமாம்!
வானிலை மைய அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 4 செ.மீ மழையும், குந்தா பாலத்தில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே கத்திரி வெயில் போல், வெப்பத்தின் தாக்கம் சுட்டெரிக்கிறது. மேலும், இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் இப்போதே சாலையோரம் தண்ணீர் பழம், பழச்சாறு, கூழ், மோர் என விற்பனை களைகட்டி வருகிறது.