மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக., திமுக., என இரு கூட்டணியிலும் பேசி வந்த தேமுதிக.,வுக்கு திமுக., கூட்டணியில் பேரம் பேசுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காரணம், இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக., கூட்டணியில் இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அதே போல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் 2 தொகுதிகளுக்கு கையெழுத்திட்டுள்ளது.
முதலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 இடமும், கொங்குநாடு தேசியக் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கிய நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் கூட்டணிக் கட்சிகளே இதுவரை மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், இன்னமும் மதிமுக., இடதுசாரிகள் ஆகியவை காத்திருப்பில் உள்ளன. இவர்களுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில், மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக., போட்டியிடக் கூடும். அதற்கும் குறைவான தொகுதிகளில் போட்டியிட திமுக., விரும்பாது என்பதால், இந்தக் கூட்டணியில் தேமுதிக., இணைய வாய்ப்பில்லை என்று கூறப் படுகிறது.