விஜயகாந்த்துக்கு கொடுக்கப் பட்டது போன்ற உயர் தர சிகிச்சையை ஜெயலலிதாவுக்குக் கொடுத்திருந்தால், அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றுதான் நாங்கள் அமெரிக்காவில் இருந்த போது கூறிக் கொண்டிருந்தோம் என்று பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.
திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது… நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி. எம்.ஜி.ஆரை தனது ரோல் மாடலாக கொண்டவர் விஜயகாந்த். இந்தக் கூட்டணி ராசியான கூட்டணி. அதற்கு சாட்சி 2011 தேர்தல் முடிவுகள்.
அதிமுக 4 எழுத்து, தேமுதிக 4 எழுத்து. நமக்கு கிடைத்திருக்கும் இடங்கள் 4. எம்.ஜி.ஆர், ஜெ, விஜயகாந்த் என மூவருமே திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் சாதித்தவர்கள்.
தேமுதிக, அதிமுக, பாஜக அனைவருமே பக்திமான்கள். பக்தி இருக்குமிடத்தில் பணிவும், துணிவும் இருக்கும். எதிரணியினர் சாமி இல்லை என்று சொல்லிக் கொண்டே, கொல்லைபுறம் சென்று கடவுளை வழிபடக்கூடியவர்கள்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கை விரலை உயர்த்தி காட்டுவர். அந்த இரட்டை விரலில் விஜயகாந்தின் முதல் எழுத்தான ‘V’ உள்ளது. அது வெற்றியை குறிக்கும். இறுதிவரை கூட்டணி தர்மத்திற்காக பாடுபடும் கட்சி தேமுதிக.
எதிரணியால் பிரதமர் வேட்பாளரை கூட சொல்ல முடியாது. ராகுல் காந்திக்கும், நரேந்திர மோடிக்கும் உள்ள வித்தியாசம் மடுவுக்கும்- மலைக்கும் உள்ள வித்தியாசம்.
விரைவில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் பங்கேற்பார். அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சையில் இருந்தபோது நாங்கள் நினைத்தது, இதுபோல் மருத்துவ சிகிச்சை ஜெ-விற்கு வழங்கியிருந்தால் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருப்பார் என்பதுதான்.. என்று பேசினார் பிரேமலதா.