பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரது மகன் பாஜக ஒழிக என சொன்னதால் பரபரப்பு
ஏற்பட்டது. நேற்று விமான நிலையத்தில் அதிமுக.,வின் ராஜன் செல்லப்பா கூறிய கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசிக் கொண்டிருந்த போது அவருக்குப் பின்னால் வந்த அவரது மகன் ‘பாஜக ஒழிக’ எனக் கோஷமிட்டார். இதனையடுத்து தமிழிசையின் ஆதரவாளர்கள் அவரை அப்புறப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே தமிழிசை பேசிக் கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவர் ஒருவரும் விமான நிலையத்தில் மாணவி சோபியாவும் இது போல், பாஜக வுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அதற்கே பெரிதாக ஒன்றும் கண்டுகொள்ளாத பாஜக., தமிழிசை மகன் அதே போல் கூவியதால், எதுவும் செய்துவிடப் போவதில்லை என்கின்றனர் கட்சியினர்.
ஏற்கெனவே தமிழிசையின் மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடையப் போகிறது. தமிழகத்துக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்தாக வேண்டும். இந்நிலையில், அவர் வெற்றி பெற்று எம்.பி.,யாகி விடுவார் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர் பாஜக.,வினர். ஆனால் படுதோல்வியே பாஜக.,வுக்கு மிஞ்சியது. கட்சித் தலைமையை தேர்தலுக்கு முன்பே மாற்றியிருக்க வேண்டும் என்று பாஜக.,வினர் பலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த தமிழிசை, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த போது, திடீரென அவருடைய மகன் சுகநாதன் திடீரென தமிழிசை பின்புறம் நின்றுகொண்டு `பாஜக., ஒழிக’ என்று கோஷமிட, அது டிவி., நேரலையில் ஒளிபரப்பானது.
பாஜக., தலைவரின் மகனே அந்தக் கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தது, சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது! இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழிசை அந்த நேரம் தனது அருகில் இருந்தவர்களிடம் சொல்லி, அவரை அங்கிருந்து அப்புறப் படுத்தும் படி உத்தரவிட்டார். அதன்படி, அவரது மகன் வெளியேற்றப்பட்டார். என்றாலும், இந்தச் சம்பவம் பாஜக.வினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமித் ஷாவுக்கும் தமிழக பாஜக.,வில் இருந்தவர்கள் புகார்களை அனுப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தமிழிசை இது குறித்து நேற்று ஒரு விளக்கம் அளித்தார்.
அதில், `திருமணம் ஒன்றுக்காக குடும்பத்தினருடன் திருச்சி செல்ல இருந்த நேரத்தில் உத்தரப் பிரதேச துணை முதல்வர் தமிழகம் வருகை தர இருந்தார். இதனால் எனது திருச்சி பயணத்தை நான் ரத்து செய்துவிட்ட கோபத்தில், என் மகன் இவ்வாறு செய்துவிட்டார்’ என்று தமிழிசை சொல்லியுள்ளார்.
குடும்பசூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்,
என் பணிகளும்,பயணங்களும் தொடரத்தான் செய்யும்…
இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்…
சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை.
என்று அவர் குறிப்பிட்டுள்ள டிவிட்டர் பதிவில்…
அன்பின் அன்பான வணக்கம்
நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன்
நேற்றையதினம் மரியாதைக்குரிய உத்தரப்பிரதேச துணை முதல்வர் திரு திணேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டதால் நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லி விட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபம் அடைந்து கட்சி தான் முக்கியமா என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார்
இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது
குடும்பத் தலைவியாகவும் இருந்து கொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது குடும்பத்தை விட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக்கூடிய கழிவுகள்தான் இவை
ஏன் அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வழியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன்
ஆக சாதாரணமாக நடந்த ஒரு குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது மனதை உறுத்தினாலும் பொதுவாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்கிறேன்
அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்
எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்
என் பணிகளும் பயணங்களும் தொடரத்தான் செய்யும்
இதில் பாசப் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்
சவால்களை எதிர் கொள்வதே வாழ்க்கை – என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழிசை மகனின் செயல் பாடு சற்றே அருவருப்பானது தான்! மாபெரும் தேசிய இயக்கத்தின் தமிழக தலைவர் தன் தாய் என்பதை கூட அறியாமல் பொது வெளியில் இயக்கத்தை திட்டுவது அநாகரீகமானது! இதை குடும்ப பிரச்சனையாக பார்க்க பாஜக ஒற்றும் குடும்ப கட்சி அல்ல; கோடான கோடி தொண்டர்களின் வழிகாட்டு இயக்கம் – என்று குமுறுகிறார்கள் பாஜக., தொண்டர்கள்.
ஏற்கெனவே, கருணாநிதி நினைவு ஏந்தல் நிகழ்ச்சி என்று, மேடையில் அமர்ந்து கொண்டு, அதே மேடையில் பிரதமர் மோடியை வசைபாடியும் கேவலப்படுத்தியும் பலரும் பேசிய போதும் அதை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்தவர் என்பதால் அப்போதே பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப் பட்டது. இந்நிலையில், பாஜக., தலைமை தமிழிசை மீது வருத்தத்தில் இருப்பதாகக் கூறப் படுகிறது. ஏற்கெனவே ஒரு முறை தலைமை நீட்டிப்பு கொடுத்து விட்ட நிலையில், தற்போது முடிவடையும் தலைமைப் பதவி மீண்டும் நீட்டிக்கப் பட வாய்ப்பில்லை என்றே பாஜக.,வினர் கூறுகின்றனர்.