நீட் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடியுமா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் சபையில் உறுதி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் மசோதாக்கள் நிராகரிப்பு குறித்து இன்று (ஜூலை 8) கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது, நீட் தேர்வுக்கு காரணமே காங்கிரஸ் கட்சிதான் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
முன்னதாக, ’நீட் குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்’ கொண்டு வந்தது. நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரினார். சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு உள்ளது என்று, நீட் விவகாரத்தில் பேரவையில் ஸ்டாலின் பேசினார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தின் ஆணிவேரை சாய்த்து பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது என்றார் ஸ்டாலின்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும். காரணங்கள் குறித்து ஆராயப்படும், என்றார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில், ” ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவில் குறைபாடுகள் இருந்தால், சரிசெய்து ஒப்புதல் பெற வாய்ப்பு இருக்கிறது,” என்றார்.