திருப்புகழ்க் கதைகள் 209
– முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்-
சிந்துர கூரமருப்பு – பழநி
காலகேயர்கள்
தேர் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது இடை வழியில் அர்ச்சுனன் ஒரு விநோதமான காட்சியைக் கண்டான். அந்தரத்தில் மறைந்து நின்று தொங்குவதைப் போலத் தொலைவில் ஒளிமயமான நகரம் ஒன்று மேகங்களுக்கிடையே தென்பட்டது. அர்ச்சுனன் தேர்ப்பாகனை வினவினான். “மாதலீ! அதோ தெரியும் நகரத்தின் பெயர் என்ன? அந்த நகரத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா?”
“பிரபு! அந்த நகரம் காலகேயர்கள் வசிக்கும் நகரம், காலகை, பூலோமை என்ற பெயரினரான இரண்டு பெண்களுக்குச் சொந்தமானது. அதிரூபவதியான அந்தப் பெண்கள் பிரம்மாவை நோக்கித் தவம் செய்து சாகாவரமும் மற்றும் பல அரிய வரங்களும் பெற்றுள்ளார்கள். நகரத்திற்கு இரணிய நகரம் என்று பெயர். காலகை, பூலோமை இருவருக்கும் மக்கள் முறை உடையவர்களாகிய அறுபதினாயிரம் மாவீரர்கள் அங்கு வாழ்கின்றனர். அந்த நகரில் வாழ்கிறவர்களுடைய அழகிய தோற்றம், கண்டவர்களை வணங்குமாறு செய்யும் இயல்பை உடையது. சுடச்சுடச் சுடரும் செம்பொன் போன்ற மேனி நிறத்தை உடையவர்கள். உலகெங்கும் தங்கள் பெயரை நிலை நாட்டிய பெருமையுடையவர்கள். இன்று வரை யாருக்கும் போரில் தோற்காதவர்கள் தேவர்கள் கூடக் காலகேயர்களின் இரணிய நகரத்துப் பக்கம் போவதற்கு அஞ்சுவார்கள்.“ என்று மாதலி விவரங்களைக் கூறினான்.
அர்ச்சுனன் மாதிலியை தேறை அங்கு செலுத்தச் சொன்னான். மாதலி காலகேயர்கள் வசிக்கும் இரணிய நகரத்தை நோக்கித் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனனுடைய தேர் இரணிய நகரத்து எல்லையை அடைவதற்கு முன்பே காலகேயர்கள் அவன் போருக்கு வருவதை எப்படியே உணர்ந்து விட்டார்கள். எனவே அவர்கள் போர்க்கோலம் பூண்டு எதிர்க்கப் புறப்பட்டனர். கண்டவர்களை மயக்கும் அழகிய தோற்றம் உடையவர்களாகிய அவர்களுக்குப் போர்க் கோலமும் சினமும் கூடக் கவர்ச்சி நிறைந்தே தோற்றமளித்தது.
அர்ச்சுனனுக்கும் காலகேயர்களுக்கும் கடும் போர் நடந்தது. முடிவில் தோயமாபுரத்திற் செய்தது போலவே பாசுபதா ஸ்திரத்தை எடுத்துச் செலுத்தினான் அர்ச்சுனன். பாசுபதாஸ்திரத்தின் விளைவாக காலகேயர்கள் எனப்படும் மாயத் தோற்றங்கள் அழிந்தன. புறத்திலே மினுமினுத்து அகத்திலே வஞ்சனை செறிந்த அந்தப் பொய்யுடல்கள் இருந்த இடம் தெரியாமற் பூண்டோடு போய் விட்டன. இரணிய நகரம் என்று மேகங்களின் ஊடே தெரிந்த அந்த நகரமும் மறைந்தது. வில் நாணையே வெற்றி முழக்கத்துக்குரிய வாத்தியமாகக் கொண்டு ஐங்கார நாதம் செய்தான் அர்ச் சுனன். ‘தேவர்கள் தங்கள் பகைவர்கள் யாவரும் தொலைந்தனர்’ என்றெண்ணி மகிழ்ந்தனர். மாதலி வெற்றி மிடுக்குடன் தேரை வானவருலகத்துத் தலைநகரை நோக்கிச் செலுத்தினான்.
ஒப்பற்ற ஒரு பேடி
பிருகன்னளை என்பது அர்ஜுனனுக்கு வைக்கப்பட்ட ஒரு பெயராகும். அர்ஜுனன் கௌரவர்கள் அறிய முடியாதபடி, நாடுகடத்தப்பட்ட ஒரு வருடத்தை பிருகன்னளையாக, ஒரு திருநங்கையாக விராட மன்னரின் மத்சய இராச்சியத்தில் கழித்தார். அந்நாட்டின் இளவரசி உத்தரைக்கு பாடல், நடனம் கற்றுத்தருபவராக இருந்தார்.
ஊர்வசி தந்த சாபம்
காலகேய, நிவாத கவசர்களை அழித்த பின்னர் அர்ஜுனன் அவனது தந்தையான இந்திரனின் அரண்மனைக்கு அழைக்கப்பட்டான். இந்திரனின் அரண்மனையில் இந்திர உலகத்தின் பணிப்பெண்களில் ஒருவரான ஊர்வசி அர்ஜுனனின் பால் ஈர்க்கப்பட்டாள். ஊர்வசியின் அழகால் தனது மகனும் மயங்கினான் என்று இந்திரன் புரிந்து கொண்டான். எனவே அர்ஜுனனுக்கு ஊர்வசியை வழங்க இந்திரன் தனக்குத் தானே முடிவெடுத்தான்.
இந்திரனின் அறிவுறுத்தல்களைப் பெற்ற ஊர்வசி ஒரு நாள் இரவு அர்ஜுனனின் அறையை அடைந்தார். ஆனால் அர்ஜுனனுக்கு ஊர்வசியிடம் காதல் நோக்கம் இல்லை. அதற்கு பதிலாக அவர் அவளை குரு இனத்தின் “தாய்” என்று அழைத்தார். ஏனெனில் ஒரு காலத்தில் ஊர்வசி குரு வம்சத்தின் மூதாதையரான புருரவரஸ் மன்னனின் மனைவியாக இருந்தார். ஒரு மனிதனால் தன்னை எதிர்க்க முடிகிறதே என, ஊர்வசி தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாள். அர்ஜுனர் தனது வாழ்நாள் முழுவதும் பெண்களுடன் பாடவும் நடனமாடவும் மட்டுமே இயலும்படியான ஒரு திருநங்கையாக ஆவார், என்று ஊர்வசி அர்ச்சுனனைச் சபித்தார். பின்னர் இந்திரனின் வேண்டுகோளின் பேரில், ஊர்வசி தனது சாபத்தை ஒரு வருட காலத்திற்குக் குறைத்தார். பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட பதின்மூன்றாம் ஆண்டில் அர்ச்சுனர் யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய காலத்தில் இந்தச் சாபத்தின்படி தான் பிருகன்னளையாக மாறினார்.